துபாயில் கட்டப்பட்ட புதிய இந்து கோயிலின் திறப்பு விழா இன்று மாலை 5.30 மணியளவில் நடைபெற உள்ளது.
துபாயில் உள்ள ஜெபல் அலி பகுதியில் கட்டப்பட்டுள்ள இந்த புதிய இந்து கோயில் இன்று திறக்கப்பட உள்ளது. இன்று மாலை 5.30 மணிக்கு நடைபெறும் திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொண்டு கோயிலை திறந்து வைக்க உள்ளார்கள்.
இந்தக் கோயில், ஏற்கெனவே அமைந்துள்ள சிந்தி குரு தர்பார் கோயிலின் விரிவாக்கம் தான். சிந்தி குரு தர்பார் கோயிலானது, ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள பழமையான இந்து கோயில்களில் ஒன்றாகும். இந்தப் புதிய கோயிலின் அடித்தளம் பிப்ரவரி 2020-ல் நாட்டப்பட்டது. இந்தக் கோயில் 148 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது
சுமார் 2 ஆண்டுகளுக்கு பின் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்தக் கோயில் இன்று (அக்டோபர் 5) முதல் பொதுமக்கள் பார்வைக்காக அதிகாரப்பூர்வமாக திறக்கப்படுகிறது.
இந்தக் கோயில் நிர்வாகம், அனைத்து மதத்தினரையும், பிற பார்வையாளர்கள் நுழைவதற்கும் அனுமதி அளித்துள்ளது. தினமும் சுமார் 1000 முதல் 1200 பக்தர்கள் வழிபாடு செய்யலாம்.
துபாயில் அமைத்துள்ள இந்தப் புதிய இந்து கோயில் காலை 6:30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். மேலும், கூட்ட நெரிச்லைத் தவிர்க்க பார்வையாளர்களுக்கு கோயில் நிர்வாகம் கியூஆர் குறியீடு அடிப்படையிலான முன்பதிவு முறையை செயல்படுத்துகிறது.
ஜெபல் அலி பகுதியில் பல தேவாலயங்கள் மற்றும் சீக்கிய குருத்வாரா உள்ளன. இந்நிலையில், இந்த புதிய இந்து கோவில் அமைக்கப்பட்டிருப்பதன் மூலம் துபாயில் வசிக்கும் இந்து மதத்தினரின் பல ஆண்டு கால கனவு நிறைவேறியுள்ளதாக மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: பழனி முருகன் கோயிலில் இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டம்; நவராத்திரி விழாவில் பரபரப்பு