திமுக மறுசீராய்வு மனுவால் 10 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு மீண்டும் தடை வரும், இந்த வழக்கிலும் திமுக வெற்றி பெறும் என அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, நாடாளுமன்ற உறுப்பினர், மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆகியோர் அண்ணா அறிவாலயத்தில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர் .
அப்போது பேசிய அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி
10 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்ட அறிக்கை வருத்தமளிக்கிறது.10% சதவீத இட ஒதுக்கீடு சட்டம் 2019 ஆம் ஆண்டு தான் பாஜக அரசு நாடாளுமன்ற தேர்தலுக்கு இரண்டு மதத்திற்கு முன்பாக அவசர அவசரமாக கொண்டு வந்தது.
மாநிலங்களவையில் தீர்மானம் கொண்டு வந்த போது 10% இட ஒதுக்கீட்டை திமுக கடுமையாக எதிர்த்தது. அப்போது அதிமுகவினர் வெளிநடப்பு செய்து விட்டார்கள். அதிமுக அன்று எதிர்த்திருந்தால் சட்டம் நிறைவேறி இருக்காது.
திமுக தான் சட்டத்தை கொண்டு வந்தது போன்று தவறான கருத்தை ஜெயக்குமார் சொல்கிறார். 10% இட ஒதுக்கீடு தொடர்பாக ஆளும் கட்சியாக இருந்த அதிமுக அப்போது அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டாதது ஏன்?.இட ஒதுக்கீட்டுக்காக உருவாக்கப்பட்ட இயக்கம் தான் திமுக சமூகநீதி தான் முக்கியம் என்று சட்டத்தை திமுக எதிர்த்தது.
மத்திய ஆட்சியில் கூட்டணியில் இருந்து காங்கிரஸ் நிறைவேற்றி இருந்தால் கூட நாங்கள் எதிர்த்து இருப்போம். நீட் தேர்வு கொண்டு வரப்பட்ட நேரத்தில் தமிழகத்தின் முதல்வராக இருந்த முத்தமிழ் அறிஞர் நீட் எதிராக உச்சநீதிமன்றம் வரை சென்று ஆட்சியில் இருக்கும் வரை நீட் தேர்வு வராமல் பார்த்துக் கொண்டார். எனவே கூட்டணி என்பது வேறு,கொள்கை என்பது வேறு.
எம்ஜிஆர் 9 ஆயிரம் ரூபாய் வருமானத்திற்கு உட்பட்டவருக்கு பொருளாதார இட ஒதுக்கீடு கொண்டு வந்த போது தமிழகத்தில் மிகப்பெரிய கிளர்ச்சி ஏற்பட்டது. அப்போது வந்த தேர்தலில் எம்ஜிஆர் தோற்றார். பின்னர் ஆட்சிக்கு வந்த எம்ஜிஆர் தான் கொண்டு வந்த சட்டத்தை அவரே வாபஸ் பெற்றார்.
இந்தியா முழுவதும் ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வாங்கி கொடுத்தது திமுக தான்… 10% இட ஒதுக்கீட்டில் குறை சொல்வதை விட்டுவிட்டு எங்கள் பின்னால் அதிமுக நின்றால் தமிழக மக்கள் கடந்த காலத்தில் அதிமுகவினர் செய்த பாவத்தை மன்னிப்பார்கள்.
10% இட ஒதுக்கீட்டால் பல பிரிவினர் பயனடைகிறார்கள் என்று சொல்லும் வானதி சீனிவாசன் பயனடைபவர்கள் யார் யார் என்ற பட்டியலை வெளியிட தயாரா ? திமுக மறுசீராய்வு மனுவால் 10 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு மீண்டும் தடை வரும், திமுக இந்த வழக்கிலும் வெற்றி பெறும் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: வெள்ளக்காடாக மாறிய போர் வீரர்களின் கல்லறை…மழையின் கோர தாண்டவம்..!