அஜித் ரசிகர் உயிரிழந்தது குறித்து பேசியபோது, இளைஞர்கள் படித்து வேலைக்கு சென்று குடும்பத்தினரை காப்பாற்ற வேண்டும் என டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.
நடிகர் அஜித்குமார் நடிப்பில் நேற்று பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியுள்ள திரைப்படம்தான், துணிவு. நேற்று அதிகாலை துணிவு திரைப்படத்தின் முதல் காட்சி பல திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இதற்காக ரசிகர்கள் பலரும் முன்னதாகவே திரையரங்குகளுக்கு முன்பாக கூடி ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என குத்தாட்டம் போட்டனர்.
அந்த வகையில், சென்னை கோயம்பேடு ரோகினி திரையரங்கம் முன்பாக கூடிய ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சாலையில் சென்று கொண்டிருந்த லாரி மீது ஏறி நின்று நடனம் ஆடிய அஜித் ரசிகர் பரத்குமார் தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. பரத்குமார் சிகிச்சைக்காக மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட நிலையில், நேற்று அதிகாலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து, பரத்குமாரின் உடலை பார்த்த அவரது பெற்றோர் மற்றும் நண்பர்கள் கதறி அழுதனர். பரத்குமார் துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பி.ஏ 3 ஆம் ஆண்டு படித்து வந்தார். இவரது தந்தை ஜானகிராமன் கூலி வேலை செய்து வருகிறார். இவர் மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர். மேலும் பரத்குமார் கல்லூரியில் படித்து கொண்டே ஆன்லைன் உணவு டெலிவரி செய்து வந்தார்.
இந்நிலையில், தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு செய்தியாளர் சந்திப்பில், சினிமா படங்கள் வெளியாகும்போது பாதுகாப்பு இல்லாத காரியங்களில் இளைஞர்கள் ஈடுபடக் கூடாது என தெரிவித்தார்.
இளைஞர்கள் பொறுப்போடு இருக்க வேண்டிய சூழலில் இதுபோன்ற சம்பவத்தால் குடும்பத்தினர் சிரமப்படுவதாகவும் கூறினார். தொடர்ந்து பேசிய சைலேந்திர பாபு, வாகனங்களில் ஏறுவது, கட் அவுட்டுகள் மீது ஏறுவது மிகவும் ஆபத்தான செயல்கள் என்றும், இளைஞர்கள் படித்து வேலைக்கு சென்று குடும்பத்தினரை காப்பாற்ற வேண்டும் என்றும் கூறினார்.
மேலும் டேங்கர் லாரி, கட் அவுட்களில் ஏறி உயிரிழக்கும் சமயத்தில் அந்த குடும்பமே சிரமப்படுகிறார்கள். கொண்டாட்டத்தின்போது இளைஞர்கள் ஆபத்தான செயல்களில் ஈடுபட வேண்டாம் என டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.