உலக சுகாதார அமைப்பு கொரோனா பரவலுக்கு புது எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா பரவல் தொடர்ந்து கடந்த 2 ½ ஆண்டுகளுக்கும் மேலாக பரவி வருகிறது. உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்களின் படி, உலக நாடுகள் அனைத்தும் அவர்களால் முடிந்த அளவுக்கு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை எட்டியுள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானாம் தெரிவித்துள்ளதாவது:
கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்படும் மரணங்களைத் தடுப்பதற்குத் தேவையான அனைத்துக் கருவிகளையும் வைத்திருக்கிறோம். தற்போது இந்த ஆண்டு மட்டும் 10 லட்சம் பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்தனர்.
ஜூன் மாத இறுதிக்குள் நாட்டில் 70 சதவீத மக்கள் கண்டிப்பாக தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். அனால் இதனை 136 நாடுகள் இன்னும் பூர்த்தி செய்யவில்லை. 66 நாடுகளில் தடுப்பூசி செலுத்தியவர்கள் எண்ணிக்கை 40 சதவீதத்துக்கும் குறைவாக இருக்கிறது.
நாம் மிக துயரமான தூரத்தை எட்டியிருக்கிறோம். கொரோனா பரவல் குறைந்துவிட்டது என எண்ண வேண்டாம் .
அனைத்து சுகாதாரப் பணியாளர்கள், முதியவர்கள் மற்றும் அதிக ஆபத்தில் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான முயற்சிகளை வலுப்படுத்துமாறு அனைத்து அரசாங்கங்களையும் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.