சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை முதல்வரை நேரில் சந்தித்து ஜெயலலிதா மரணம் குறித்த அறிக்கையை நீதிபதி ஆறுமுகசாமி வழங்கினார்.
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பலரும் தெரிவித்த நிலையில், கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் 25 ஆம் தேதி ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.
நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணைக்கு முதலில் மூன்று மாதம் கால அவகாசம் வழங்கப்பட்டது. அதன்பின்பு, கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. மீண்டும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இதேபோல் இதுவரை 14 முறை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணையால், கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணைக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், எய்ம்ஸ் மருத்துவக் குழு உதவியுடன் விசாரணையை மீண்டும் தொடர உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து, உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி 2022 மார்ச் 7 முதல் ஆறுமுகசாமி தலைமையில் மீண்டும் விசாரணை தொடங்கப்பட்டது. இந்த விசாரணையில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதா உறவினர்கள் மற்றும் சசிகலாவின் உறவினர்கள், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் என மொத்தம் 159 பேரிடம் ஆணையம் விசாரணை நடத்தப்பட்டது.
இந்நிலையில், தற்போது 5 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று தற்போதைய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 600 பக்கங்கள் கொண்ட ஜெயலலிதா மரணம் குறித்த இறுதி அறிக்கையை நீதிபதி ஆறுமுகசாமி, சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை முதல்வரை நேரில் சந்தித்து அறிக்கையை வழங்கினார்.