காங்கிரஸ் கட்சியில் பெரியவர், சிறியவர் என்று யாருமில்லை என்றும், அனைவரும் தொண்டர்கள் போல் கட்சிக்காக உழைக்க வேண்டுமென்று காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வெற்றிபெற்ற பிறகு முதல் முறையாக செய்தியாளர்களைச் சந்தித்த கார்கே பேசியதாவது:
ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது. இந்தியாவில் ஜனநாயகத்தை பாதுகாத்தது காங்கிரஸ் தான். தேர்தலில் போட்டியிட்ட சசி தரூருக்கு வாழ்த்துகள். அவருடன் இணைந்து பணியாற்றுவேன். அவரை சந்தித்து கட்சியை முன்னெடுத்து செல்வது குறித்து ஆலோசனை நடத்துவேன்.
ராகுலின் பாரத் ஜோடோ யாத்திரையில் தேசம் இணைந்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக சோனியா தன்னையே தியாகம் செய்துள்ளார். கட்சி தொண்டர்கள் சார்பில், அவருக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். அவரது தலைமையின் கீழ் தான் இரண்டு முறை மத்தியில் ஆட்சி அமைத்தோம். ஜனநாயகத்தை கொல்ல நடக்கும் முயற்சியை எதிர்த்து போராட வேண்டும்.
சர்வாதிகாரம் மூலம் நாட்டை ஆட்சி செய்ய முடியாது. கட்சி தேர்தல் மூலம் ஜனநாயகத்தை பலப்படுத்தி உள்ளோம். நாம் அனைவரும் தொண்டர்கள் போல் கட்சிக்காக பணியாற்ற வேண்டும். கட்சியில் பெரியவர் சிறியவர் என யாரும் இல்லை. ஜனநாயக அமைப்புகள் மீது தாக்குதல் நடத்துபவர்களுக்கு எதிராக ஒற்றுமையாக போராட வேண்டும்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: காங்கிரஸ் தலைவராகிறார் மல்லிகார்ஜுன கார்கே! 24 ஆண்டுகளுக்கு பிறகு நிகழ்ந்த புதிய மாற்றம்