மனைவியை கொன்றதாக பல ஆண்டுகள் கணவர் சிறை வாசம் அனுபவித்த நிலையில், காவல்துறையினர் அவரது மனைவி உயிருடன் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சோனு, ஆர்த்தி என்ற பெண்ணை கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். திருமணம் ஆனதை அடுத்து, சோனு பெயரில் உள்ள சொத்துக்களை தனது பெயரில் மாற்றித் தருமாறு ஆர்த்தி கேட்டுள்ளார். இதனை சோனு மறுத்ததால், ஆர்த்தி திடீரென காணாமல் சென்றுள்ளார். ஆர்த்தியை பல இடங்களிலும் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதனிடையே, மதுரா அருகே உள்ள கால்வாயில், இறந்த நிலையில் ஒரு பெண்ணின் உடல் கைப்பற்றப்பட்டது. பிரேத பரிசோதனை செய்யாமல் அந்தப்பெண்ணின் உடல் எரியூட்டப்பட்டது.
இதைத்தொடர்ந்து, தனது மகளை காணவில்லை என ஆர்த்தியின் தந்தை 6 மாதங்களுக்கு பின்பு காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, எரியூட்டப்பட்ட பெண்ணின் புகைப்படத்தை காண்பித்ததும், அது தனது மகள் ஆர்த்தி என்று அவர் கூறியுள்ளார். இதன் காரணமாக ஆர்த்தியின் தந்தை சோனு மற்றும் அவரது நண்பர் மீது புகார் அளித்ததன் அடிப்படையில், அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
இதன்பிறகு, பிணையில் வெளியே வந்த சோனுவும் அவரது நண்பரும் ஆர்த்தி இருக்கும் இடத்தை தேடி கண்டுபிடித்து, காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். தொடர்ந்து காவல்துறையினர் ஆர்த்தியை கண்டறிந்து கைது செய்தனர்.
இந்நிலையில், குற்றம் செய்யாமல் பல ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த சோனுவும் அவரது நண்பரும் நீதி கிடைக்கும் என காத்திருக்கின்றனர்.
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!