23 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்களின் கணக்குகளை வாட்சப் நீக்கியுள்ளது.
வாட்சப் செயலியின் தமிழாக்கம் புலனம் அல்லது பகிரி எனப்படுகிறது. இந்த பகிரி செயலியை உலகம் முழுவதும் பல்வேறு மக்கள் உபயோகித்து வருகின்றனர். கேளிக்கையில் ஆரம்பித்து முக்கியமான விடயங்கள் வரை பகிரவும், உரையாடவும் பகிரி செயலியானது பயன்படுத்தப்பட்டு வருகிறது. இச்செயலி இல்லையென்றால் அடிப்படை முதல் ஆடம்பரம் வரை அனைத்து வகையான அன்றாடங்களிலும் குறுக்கீடுகள் நேரும் என்ற அளவுக்கு பகிரி செயலியின் தேவை உள்ளது.
இந்நிலையில், புதிய தகவல் தொழில்நுட்ப கொள்கை விதிகளை மீறியதாக கடந்த ஜூலையில் மட்டும் சுமார் 23 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்களின் கணக்குகளை வாட்சப் நீக்கியுள்ளது.
இது குறித்து வாட்சப் நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:
விதிமீறல்கள் தொடர்பாக நிறுவனத்துக்கு வந்த புகார்களின் அடிப்படையிலும், விதிமீறல்களை கண்டறியும் தொழில்நுட்பத்தின் அடிப்படையிலும் கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளது.
மேலும், புகார் அளிக்கப்படுவதற்கு முன்பாகவே 14 லட்சம் கணக்குகள் முடக்கப்பட்டது.
இவ்வாறாக வாட்சப் நிறுவனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.