தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் தொழிற்சாலையில் காப்பர் உற்பத்தி செய்யப்பட்டு வந்த நிலையில், இந்த ஆலை மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலை தரப்பில் ஆலையை விற்பனை செய்வதாக விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 2018ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தின்போது காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து 2018ம் ஆண்டு மே 28ம் தேதி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது.
இதை எதிர்த்து ஆலையை திறக்க வேண்டும் என கோரிக்கையுடன் வேதாந்தா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் ஆலை மூடலுக்கான அரசின் உத்தரவு தொடரும் தீர்ப்பளித்த வேதாந்தாவின் மனுவை தள்ளுபடி செய்தது. அதனைத் தொடர்ந்து, உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் மேல்முறையீடு செய்தது. கொரோனா அதிகரித்த காலத்தில் ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் ஆக்சிஜனை இலவசமாக வழங்க ஸ்டெர்லைட் நிறுவனம் முன் வந்த நிலையில், அதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
அதன்படி, 3 மாதம் உற்பத்திக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் மீண்டும் ஆலை மூடப்பட்டது. இதை தொடர்ந்து கடந்த நவம்பர் மாதம் பராமரிப்பு பணிக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் கோரிக்கை விடுத்தது. ஆனால் அந்த கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.
இந்நிலையில் தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை விற்பனை செய்யவுள்ளதாகவும், வாங்க விருப்பம் உள்ளவர்கள் வரும் ஜூலை 4ம் தேதிக்கு முன்னதாக விண்ணப்பங்களை அனுப்பவேண்டும் என்றும் வேதாந்தா நிறுவனம் நாளிதழ்களில் விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் ஸ்டெர்லைட் ஆலை தன்னுடைய செயல்பாட்டை இனி தொடராது என்பது உறுதியாகியுள்ளது.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் தொழிற்சாலையில் தாமிர உருக்கு வளாகம், கந்தக அமில தொழிற்சாலை, தாமிர சுத்திகரிப்பு ஆலை, தொடர் தாமிர கம்பி ஆலை, பாஸ்பாரிக் அமில தொழிற்சாலை, ஆக்சிஜன் உற்பத்தி ஆலை, ஊழியர்கள் குடியிருப்பு வளாகம் என10 பிரிவுகள் விற்பனைக்கு வருவதாக விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆக்சிஸ் கேபிடல் என்ற நிறுவனத்தின் மூலம் இந்த விற்பனைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.ஸ்டெர்லைட் ஆலையை விற்பனை செய்வதாக வேதாந்தா நிறுவனம் அறிவித்ததால் பங்கு சந்தையில் வேதாந்தா நிறுவனத்தின் பங்குகள் சரிய தொடங்கி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.