இந்தியாவின் தற்போதைய குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் அவர்களின் பதவிக்காலம் ஜூலை மாதத்துடன் நிறைவடைவதையடுத்து அடுத்த குடியரசுத் தலைவருக்கான தேர்தல் நடைபெறவுள்ளது.
ஜூலை மாதம் 18ம் தேதி நடைபெறவுள்ள குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளர்களை இந்த மாதம் 29ம் தேதிக்குள் அறிவிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஆளும் கட்சியான பாஜக, தனது வேட்பாளரினை இன்று அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று வரை எந்த கட்சியும் தங்களது குடியரசுத் தலைவர் வேட்பாளரை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று டெல்லியில் பாராளுமன்ற ஆலோசனைக் கூட்டத்தினை பாஜக நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த கூட்டத்திற்கு பாஜக கட்சித் தலைவர் ஜேபி நட்டா தலைமை வகிப்பார் எனவும், பிரதமர் நரேந்திர மோடி அவர்களும் இந்த கூட்டத்தில் கலந்துகொள்வார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கூட்டத்தின் முடிவில் குடியரசுத் தலைவருக்கான வேட்பாளர் அறிவிக்கப்படலாம் எனபது மாதிரியான தகவல்கள் வெளியாகி வருகின்றன. முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை அன்று பாஜக தலைவர் ஜேபி நட்டா கட்சியின் முக்கிய உறுப்பினர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கஜேந்திர சிங், ஷெகாவத், அஷ்வினி வைஷ்ணவ், ஜி கிஷான் ரெட்டி, அர்ஜுன் ராம் மேக்வால், வினோத் த்வாதே, சிடி ரவி, சம்பித் பத்ரா மற்றும் பலரும் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனைக் கூட்டமானது வரும் குடியரசுத் தலைவருக்கான தேர்தல் தொடர்பாக நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மேலும், தங்களது குடியரசுத் தலைவர் வேட்பாளராக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியானது முன்னாள் ஒன்றிய அமைச்சர் யஸ்வந்த் சின்ஹாவினை முன்னிறுத்தலாம் என்ற தகவல்கள் வெளிவந்துள்ளன.
இதற்கு முன்னதாக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து முன்னாள் காஷ்மீர் முதல்வர் ஃபரூக் அப்துல்லா மற்றும் முன்னாள் குடியரசுத் தலைவர் வேட்பாளர் கோபால கிருஷ்ண காந்தி ஆகியோரை குடியரசு தலைவர் வேட்பாளராக பரிந்துரைக்க ஏற்பாடு செய்திருந்தன.
ஆனால் அவர்கள் இருவருமே குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு போட்டியிட தங்களுக்கு விருப்பமில்லை எனக்கூறி நிராகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
குடியரசுத் தலைவர் தேர்தலானது ஜூலை மாதம் 18ம் தேதி நடைபெறுகிறது. தேர்தலின் வாக்கு எண்ணிக்கையானது ஜூலை 21ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.