தாளவாடி அருகே கூலி தொழிலாளி வீட்டின் மின் கட்டணம் 95 ஆயிரம் ரூபாய் என்று தவறாக பதிவு செய்யப்பட்டதாகவும், தற்போது அந்தத் தவறு சரி செய்யப்பட்டுள்ளதாகவும் மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம், தாளவாடியை அடுத்த மல்குத்திபுரம் தொட்டியைச் சேர்ந்தவர் ரேவண்ணா. இவருக்கு வயது 40. இவர் கூலி வேலை செய்யும் தொழிலாளி.
ரேவண்ணாவுக்கு மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், ரேவண்ணாவின் கைபேசிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு, மின்வாரியம் சார்பில் அனுப்பப்பட்ட குறுஞ்செய்தியில், மின் கட்டணம் ரூபாய் 94 ஆயிரத்து 985 என குறிப்பிடப்பட்டிருந்தது.
திடீரென மின்கட்டணம் உயர்ந்ததால் அதிர்ச்சி அடைந்த ரேவண்ணா மின்வாரியத்துக்கு சென்று, மின்சார இணைப்பு பதிவு எண்ணை சோதனைச் செய்துள்ளார்.
அப்பொழுதும் மின் கட்டணம் ரூபாய் 94 ஆயிரத்து 985 என்றே வந்துள்ளது. இதைத்தொடர்ந்து, தாளவாடி மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று உதவி செயற்பொறியாளரிடம் ரேவண்ணா புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து, ரேவண்ணா வீட்டுக்கு அதிகாரிகள் சென்று ஆய்வு செய்த பின் தான், மின் கணக்கீட்டாளர் தவறாக கணக்கெடுத்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.