சென்னை மாநகரில் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை குறைக்கவும், போக்குவரத்து விதிகளை அனைவரும் கடைபிடிக்கவும், சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
சென்னை பெருநகரில் பகுப்பாய்வு செய்ததில் கடந்த ஜனவரி ஒன்றாம் தேதி முதல் கடந்த 15ம் தேதி வரையிலான காலப்பகுதியில் இரு சக்கர வாகன விபத்துக்களில் 98 பேர் உயிரிழந்துள்ளனர். 841 பேர் காயம் அடைந்துள்ளனர்.
இதில், தலைக்கவசம் அணியாமல் பயணித்ததில் இருசக்கர வாகன ஓட்டிகள் 80 பேரும், பின்னிருக்கையில் இருந்த 18 பேரும் உயிரிழந்தனர். இருசக்கர வாகன ஓட்டிகள் 714 பேரும், பின்னிருக்கையில் பயணித்த 127 பேரும் காயமடைந்துள்ளனர் என தெரிய வந்துள்ளது.
இதனால், இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின் இருக்கையில் அமர்ந்து செல்வோர், கட்டாயம் ‘ஹெல்மெட்’ அணிந்து செல்ல வேண்டும் என்ற திட்டம், இன்று முதல் மீண்டும் தீவிரப்படுத்தப்படுகிறது. இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின் இருக்கையில் அமர்ந்து செல்வோர், கட்டாயம் ‘ஹெல்மெட்’ அணிந்து செல்ல வேண்டும். மீறினால் அபராதம் விதிக்கப்படும் என, போலீசார் எச்சரித்து வருகின்றனர்.
ஆனால், 50 சதவீத வாகன ஓட்டிகள் கூட இதை கடைப்பிடிப்பது இல்லை. அப்படியே, ஹெல்மெட் வைத்திருந்தாலும் தலையில் அணிவது இல்லை. இரு சக்கர வாகனத்தில் தொங்க விட்டு செல்வது மற்றும் டேங்கரில் வைத்து பயணிப்பதுமாக உள்ளனர்.
சமீபத்தில், சென்னை மாநகர போக்குவரத்து போலீசார், சாலை விபத்துகள் குறித்து ஆய்வு செய்தனர். அப்போது, விபத்தில் சிக்குவோரில், ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டியவர்கள் மற்றும் பின் இருக்கையில் அமர்ந்து சென்றோரே அதிகமாக உயிரிழந்துள்ளனர்; இதையொட்டி, சென்னை முழுதும் போக்குவரத்து போலீசார் தனிக்கவனம் செலுத்தி வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து, போக்குவரத்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறுகையில், ‘உயிரிழப்புகளை தடுக்கவே, இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின் இருக்கையில் அமர்ந்து செல்வோர் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என, வலியுறுத்தப்பட்டுள்ளது. ‘மறந்து வீட்டில் வைத்துவிட்டேன். இனி தான் வாங்க வேண்டும்’ என, ஏதாவது ஒரு காரணத்தை கூறி, போக்குவரத்து விதிகளை மீற முயற்சி செய்ய வேண்டாம்’ என்று கூறியுள்ளார்.
இந்தியாவையே உலுக்கிய ‘விஸ்மயா’ வழக்கு; வெளிவந்த அதிரடி தீர்ப்பு!