நியாயவிலைக் கடைகளில் சோப்பு, அரிசிமாவு உள்ளிட்ட பொருட்களை வாங்க பொதுமக்களை கட்டாயப்படுத்த கூடாது என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் நியாயவிலைக் கடைகளில் இலவச அரிசி, குறைந்த விலையில் பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
பொருள்களை வாங்க வரும் பொதுமக்களிடம் சோப்பு, சேமியா அரிசிமாவு உள்ளிட்ட பொருள்களை வாங்க கட்டாயப்படுத்தப்படுவதாக புகார்கள் எழுந்தன. மேலும், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான நியாயவிலைக் கடைகளில் சோப்பு, சேமியா போன்றவற்றை வாங்காவிட்டால், நியாயவிலைக் கடை பொருட்கள் கிடையாது என ஊழியர்கள் தெரிவித்தாக சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் சித்தையன் கோட்டையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி புதிய நியாயவிலைக் கடையை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு பொருட்களை வழங்கினார்.
அப்போது அவர், செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது:
நியாயவிலைக் கடைகளில் சோப்பு உள்ளிட்ட மற்ற பொருட்களை வாங்க எந்த ஊழியர்களும் பொதுமக்களை கட்டாயப்படுத்த கூடாது. அவ்வாறு யாரேனும் கட்டாயப்படுத்தினால் அந்த நியாயவிலைக் கடை ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து பொதுமக்கள் தாராளமாக புகார் அளிக்கலாம்.
இவ்வாறு, அவர் பேசியுள்ளார்.
இதையும் படிங்க: மக்களே ரெடியா? தீபாவளிக்கான முன்பதிவு தொடங்கியது..