நாங்கள் இன்னும் எப்படி எங்களது ஆட்டத்தை மேம்படுத்த வேண்டும் என்று சிந்திக்க வேண்டும் என ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
இருபது ஓவர் உலகக் கோப்பைப் போட்டி இந்த மாதத்தில் ஆஸ்திரேலியாவில் தொடங்க உள்ளது. இந்நிலையில்தான், இந்திய அணி உலகின் சிறந்த அணிகளான ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக விளையாடி இருபது ஓவர் தொடரைக் கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில், தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான கடைசி இருபது ஓவர் போட்டியின் தோல்விக்குப் பிறகு ரோஹித் சர்மா பேசியது தற்போது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
ரோஹித் சர்மா கூறியதாவது:
ஆட்டத்தின் முடிவு என்னவாக இருந்தாலும் ஒரு அணியாக நாங்கள் முன்னேற்றமடைந்து வருகிறோம். நாங்கள் அனைத்துத் துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டாலும் மேலும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று நினைக்கிறேன். நாங்கள் எங்களது பந்துவீச்சில் கவனம் செலுத்த வேண்டும். பவர்பிளேவில் என்ன செய்ய வேண்டும் மிடில் ஓவர் மற்றும் டெப்த் ஓவர்களில் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தெளிவாக இருக்க வேண்டும். நாங்கள் இரு சிறந்த அணிகளுடன் விளையாடியுள்ளோம்.
இருப்பினும், நாங்கள் இன்னும் எப்படி எங்களது ஆட்டத்தை மேம்படுத்த வேண்டும் என்று சிந்திக்க வேண்டும். இது ஒரு சவாலான காரியம். ஆனால், நாங்கள் அதற்கான விடையைத் தேடிக்கொண்டுதான் இருக்கிறோம். ஆஸ்திரேலியாவிற்கு நாங்கள் விரைவாக செல்ல உள்ளோம். உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் உள்ள வீரர்கள் பலருக்கு ஆஸ்திரேலிய மைதானங்கள் புதிது. அவர்கள் ஆடுகளத்தின் தன்மையைத் தெரிந்துகொள்ள வேண்டும். உலகக் கோப்பை லீக் ஆட்டங்களுக்கு முன்னதாக நாங்கள் இரு பயிற்சி ஆட்டங்களில் விளையாட உள்ளோம்.
இவ்வாறு ரோஹித் சர்மா கூறினார்.
இதையும் படிங்க: போராடிய இந்தியா…ஆறுதலடைந்த தென்னாப்பிரிக்கா; இறுதி போட்டியில் நடந்தது என்ன?