இந்தியாவுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் இறுதி இருபது ஓவர் போட்டியில் தென்னாப்பிரிக்கா 49 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் இறுதி இருபது ஓவர் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்றது. இதைத்தொடர்ந்து கேப்டன் ரோஹித் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார். தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியின் டிகாக் சிறப்பான தொடக்கம் கொடுக்க, பாவுமா 3 ரன்களுக்கு வெளியேறினார். இதையடுத்து களமிறங்கிய ரோசோவ் அதிரடியாக விளையாடி 48 பந்துகளுக்கு சதமடித்து அசத்தினார். இதனால் தென்னாப்பிரிக்க அணி 3 விக்கெட்டுகளை இழந்து 227 ரன்கள் குவித்தது.
இதையும் படிங்க:சமூகநலத் துறையில் வேலை: வெளியான அரசின் அறிவிப்பு
இதைத்தொடர்ந்து, 228 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கியது இந்திய அணி. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய கேப்டன் ரோஹித் சர்மா ரன் எடுக்காமலும், ஸ்ரேயஸ் ஐயர் 1 ரன்னிலும் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர். இதனையடுத்து, ரிஷப் பந்த் உடன் ஜோடி சேர்ந்தார் தினேஷ் கார்த்திக். இவர்களின் இணை சீராக ரன்கள் குவித்த போதிலும் பந்த் 27 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
தினேஷ் கார்த்திக் ஒரு புறம் அதிரடியாக ஆட மறுமுனையில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. அதிரடியாக விளையாடிய தினேஷ் கார்த்திக் 21 பந்துகளில் 46 ரன்கள் குவித்து வெளியேறினார்.
பின்னர், தீபக் சஹார் 17 பந்துகளில் அதிரடியாக 31 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 18.3 ஓவர்களில் 178 ரன்களுக்கு தனது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதன்மூலம், 49 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தென்னாப்பிரிக்க அணியிடம் தோல்வியடைந்தது. இருப்பினும், இருபது ஓவர் தொடரைப் பொறுத்தவரையில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியுள்ளது.