உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்குக்கு ட்விட்டரை விற்பனை செய்வது தொடர்பாக அந்நிறுவனம் வாக்கெடுப்பு நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் கடந்த மே மாதம் மிகவும் பிரபலமான சமூக வலைத்தளமான ட்விட்டரை 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு (இந்திய மதிப்பில் ரூ3.30 லட்சம் கோடி) வாங்குவதற்காக ட்விட்டர் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தார்.
இந்த ஒப்பந்தம் இறுதி கட்டத்தை எட்டியிருந்த நிலையில், இன்னும் ஆறு மாதங்களில் ட்விட்டரின் முழு கட்டுப்பாடும் எலான் மஸ்க் வசம் வரும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், ட்விட்டருடனான தனது ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக எலான் மஸ்க் அறிவித்திருந்தார். மேலும், போலி கணக்குகள் மற்றும் ஸ்பேம் (Spam) குறித்த முழுமையான தகவல்களை ட்விட்டர் நிறுவனம் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில், போலி கணக்குகள் குறித்து கேட்ட தகவல்களை தராததாலும், ஒப்பந்தப்படி செயல்படாததாலும் ட்விட்டரை வாங்கும் ஒப்பந்தத்தை கைவிடுவதாக கடந்த ஜூலை 2-ம் வாரத்தில் எலான் மஸ்க் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, ட்விட்டர் தலைவர் பிரட் டெய்லர், எலான் மஸ்க்குடன் மேற்கொள்ளப்பட்ட இணைப்பு ஒப்பந்தத்தை அமல்படுத்த சட்டப்பூர்வமான நடவடிக்கையை தொடர திட்டமிட்டுள்ளோம் எனக் கூறினார்.
இந்நிலையில், ட்விட்டரை எலான் மஸ்குக்கு விற்பனை செய்வது தொடர்பாக அந்நிறுவனம் விரைவில் வாக்கெடுப்பு நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
எலான் மஸ்க் மீது ட்விட்டர் நிறுவனம் வழக்கு!