விமானத்தில் பயணி ஒருவருக்கு வழங்கப்பட்ட உணவில் பாம்புத் தலை இருந்ததால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
துருக்கி தலைநகர் அங்காராவிலிருந்து ஜெர்மனியின் டுசெல்டார்ஃப் பகுதிக்கு சன் எக்ஸ்பிரஸ் என்ற நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் பயணிகளுடன் சென்றது.
இந்த விமானத்தில் பயணித்த பயணி ஒருவருக்கு ஏர்லைன்ஸ் சார்பாக வழங்கப்பட்ட உணவில் பாம்பின் தலை இருந்துள்ளது. இந்நிகழ்வு காணொளியாக இணையதளத்தில் வெளியாகி பலராலும் பகிரப்பட்டு வருகிறது. விமானத்தில் வழங்கப்பட்ட பாதி உணவை உண்ட பிறகு, பாம்பு தலை உணவில் இருப்பதை அந்த பயணி கண்டுள்ளார். இதன் பிறகு, அந்தப் பயணி விமான ஊழியர்களிடம் புகாரளித்துள்ளார். அதோடு, இந்நிகழ்வை காணொளியாகவும் பதிவு செய்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, விமானத்தில் உணவு வழங்கும் நிறுவனத்தின் ஓப்பந்தத்தை சன் எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் ரத்து செய்தது.
இச்சம்பவம் தொடர்பாக சன் எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் தெரிவித்துள்ளதாவது :
எங்கள் பயணிகளின் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது, அவர்களுக்கு வழங்கப்படும் உணவை நாங்கள் மிகவும் தரமாக வழங்கி வருகிறோம், உணவில் பாம்பு தலை இருந்துள்ளது என்று கூறுவதை எங்களால் ஏற்க முடியவில்லை. ஆனாலும் இது குறித்து விசாரித்து வருகிறோம். மேலும், உணவில் பாம்பு தலை இருந்தது துரதிருஷ்டவசமானது. இந்நிகழ்வுக்காக நாங்கள் மன்னிப்பு கோருகிறோம்.
இவ்வாறு சன் எக்ஸ்பிரஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தமிழக பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம்- கல்வியின் தரத்தை முன்னேற்றுமா?