நன்னீரில் கலந்துள்ள நுண்நெகிழி (மைக்ரோபிளாஸ்டிக்) பயன்படுத்தி வைரஸ்கள் நீண்ட நாள் உயிர்வாழ வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் தற்போது கண்டறிந்துள்ளனர்.
வைரஸ்கள்..
வைரஸ்கள் இந்த உலகத்திற்கு புதிதல்ல. மருத்துவத்துறையானது அந்தளவிற்கு வளர்ச்சியடையாத காலத்திலும் அம்மை, காலரா போன்ற பெருந்தொற்றுக்கள் மக்களைக் கொத்துக் கொத்தாக கொன்று குவித்துள்ளது.
தொழில்நுட்பமும், மருத்துவமும் வெகு வேகமாக வளர்ந்தாலும், அதற்கேற்றவாறு புதுப்புது வைரஸ்களும், பரிணாம வளர்ச்சியடைந்த பழைய வைரஸ்களும் மனிதர்களுக்கு பெரும் தொல்லைகளைக் கொடுத்து வருகின்றன.
அந்த வகையில் இரண்டு வருடத்திற்கும் மேலாக உலகத்தினை ஆட்டிப்படைத்துவரும் கோவிட்19 என்னும் நோயும் ஒரு வைரஸ் தொற்றாகும். கோவிட்டை பரப்பும் சார்ஸ் வகை வைரஸான கொரோனாவை அழிப்பது எவ்வாறு என மருத்துவத்துறையே திணறிக்கொண்டிருக்கும் நிலையில், நன்னீரில் வைரஸ் அதிக நாட்கள் உயிர்வாழ நெகிழியானது (பிளாஸ்டிக்) உதவுகிறது என்ற செய்தியானது சற்று அதிர்ச்சியைத் தரும் விடயமாகும்.
மைக்ரோபிளாஸ்டிக்..
பெரும்பாலான நெகிழி வகைகளின் இறுதி வடிவமாக நுண்நெகிழி உள்ளது. கண்ணுக்குத் தெரியாத அளவு சிறியதாய் இருக்கும் இந்த நுண்நெகிழிகள் இயற்கைக் கடத்திகளான காற்று மற்றும் நீரினால் எளிதில் எங்கும் எடுத்துச் செல்லப்படுபவையாக இருக்கின்றன.
இதன் காரணமாக இந்த நுண்நெகிழிகள் மனிதர்கள் காலடித்தடம் படாத இடங்களில்கூட தங்களது தடத்தினைப் பதிவு செய்துள்ளன. சமீபத்தில் அண்டார்டிகாவில் பெய்த புதுப்பனியில் நுண்நெகிழிகள் இருப்பது கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நுண்நெகிழிகளானது 6000 கிலோமீட்டர் தொலைவில் இருந்து வந்திருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியிருந்தனர்.
தற்போது, நீர்நிலைகளில் கலந்துள்ள இந்த நுண்நெகிழிகளைத் தங்களது வாழிடமாக மாற்றிக்கொள்வதன் மூலம் வைரஸ்கள் அதிக நாட்கள் உயிர்வாழ வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
‘ரோட்டா’ எனப்படும் டையாரியா நோயினைப் பரப்பும் வைரஸானது நுண்நெகிழியில் ஒட்டிக்கொள்வதன் மூலம் மூன்று நாட்கள் தண்ணீரில் உயிர்வாழ்வதினை அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த நுண்நெகிழிகள் உடலினுள் செல்வதன் மூலம் இந்த வைரஸ்கள் மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் எளிதில் பரவுகின்றன.
சயின்ஸ் டேரக்ட் (ScienceDirect) எனப்படும் அறிவியல் ஆய்விதழில் இந்த ஆய்வுக்கட்டுரையானது பிரசுரிக்கப்பட்டுள்ளது. தண்ணீரில் இம்மாதிரியான ஆராய்ச்சியினைச் செய்வது இதுவே முதல் முறை என பல ஆராய்ச்சியாளர்கள் கூறிவருகின்றனர்.
‘கழிவுநீர் சுத்தீகரிப்பு நிலையங்களினால் எவ்வளவு முயன்று சுத்தப்படுத்தினாலும் நுண்நெகிழிகளை நீக்குவது கடினம். இந்த நுண்நெகிழிகள் உள்ள சுத்தீகரிக்கப்பட்ட தண்ணீரானது மீண்டும் நீர் நிலைகள் இருக்கும் பகுதிகளில் திறந்து விடப்படுகின்றன. இந்த நீர்நிலைகள் அனைத்தும் இறுதியில் கடலினைப் போய்ச்சேருகிறது. இந்த தொடர்ச்சியில் வைரஸ்கள் நுண்நெகிழிகளைப் பயன்படுத்தி எவ்வாறு உயிர் வாழ்கின்றன என்பது பற்றி தெரியவில்லை. ஆனால் அவை கட்டாயம் உயிர்வாழ்கின்றன. மேலும், அவை நோய்ப்பரப்பும் தன்மையுடையதாகவும் உள்ளன.’ என்று இந்த ஆராய்ச்சி செய்த குழுவினை வழிநடத்திய ரிச்சர்ட் குயில்லியம் கூறியுள்ளார்.
பற்பல நோய்கள் தினந்தோறும் தோன்றிவரும் நிலையில் நீர்நிலைகளில், அதுவும் நன்னீரில் வைரஸ்கள் அதிக நாட்கள் உயிர்வாழ முடியும் என்ற செய்தி மனிதகுலம் மட்டுமல்லாது அனைத்து உயிரினங்களுக்கும் ஆபத்தானதாகும்.
நீதிமன்றத்தை அவமதித்தாரா எடப்பாடி? வழக்கு தொடர்ந்த சண்முகம்!