சமீபத்தில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் ரோலக்ஸ் எனும் கதாப்பாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் அன்பை பெற்ற சூர்யாவிற்கு, ஆஸ்கர் விருது குழுவில் இணைவதற்காக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
திரைத்துறைச் சார்ந்து உலகளவில் அதிக மதிப்புடைய விருதுகளில் முக்கியமானது ஆஸ்கர் விருது. அப்படியான ஆஸ்கர் விருதை வழங்கும் அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ் எனும் குழுவில் உறுப்பினராக இணைவதற்காக வருடந்தோறும் பல திரைத்துறை பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்படுவது வழக்கம். அவ்வழியில் இம்முறை இந்தியா சார்பில் நடிகர் சூர்யாவிற்கும், நடிகை கஜோலிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
2022-ஆம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருது குழுவில் உறுப்பினராக இணைய, நடிகர்கள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்கள், படத்தொகுப்பாளர்கள், தயாரிப்பாளர்கள், ஆடை வடிவமைப்பாளர்கள், ஒப்பனைக் கலைஞர்கள், சினிமா செய்தி தொடர்பாளர்கள், ஒலி வடிவமைப்பாளர்கள், கலை இயக்குநர்கள், கதாசிரியர்கள், விஷுவல் எபெஃக்ட் கலைஞர்கள், குறும்படம் மற்றும் ஆவணப்பட இயக்குநர்கள், கௌரவ உறுப்பினர்கள் என உலகெங்கிலும் உள்ள 397 திரைத்துறையினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஆஸ்கர் குழுவின் கலை மற்றும் அறிவியல் பிரிவில் உறுப்பினராக இணைவதற்காக நடிகர் சூர்யா மற்றும் நடிகை கஜோலிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வானது உலக அளவில் தென்னிந்திய திரைத்துறைக்கு பெரும் நற்பெயரைச் சேர்த்துள்ளது. இதனை ரசிகர்கள் மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர். சமூக வலைதளத்தில் ‘ப்ரைட் ஆஃப் இந்தியன் சினிமா’ எனும் ஹேஷ்டேக்கின் மூலம் சூர்யாவை திரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இவர்கள் இருவருக்கும் மட்டும் அல்லாது, இந்தியாவைச் சேர்ந்த இயக்குநர் ரீமா காக்தி, ஆவணப்பட இயக்குநர்கள் சுஷ்மித் கோஷ், ரிண்டூ தாமஸ் ஆகியோரும் அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ்-இல் 2022ஆம் ஆண்டுக்கான உறுப்பினர்களாக சேர அழைக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா காலகட்டத்தில் பலத்த எதிர்ப்புகளுக்கு நடுவே சூர்யா தனது சூரரைப்போற்று திரைப்படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட்டார். இத்திரைப்படமே உலக அளவில் சூர்யாவின் மீதான பார்வையை அதிகரிக்கச் செய்தது. இதன்பிறகு, ஓடிடி தளத்தில் வெளியான ஜெய்பீம் திரைப்படமும் சூர்யாவிற்கு நற்பெயரை பெற்றுத்தந்தது குறிப்பிடத்தக்கது.
முகேஷ் அம்பானி ராஜினாமா! யார் அடுத்த தலைவர்?