நாளை பொன்னியின் செல்வன் திரைப்படத்தை காண வயதானவர்களும் வருவார்கள் என்பதால் திரையரங்க நிர்வாகத்தினர் அவர்களுக்கு உதவ வேண்டும் என விக்ரம் பேசியுள்ளார்.
மணிரத்னம் இயக்கத்தில், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, பிரகாஷ்ராஜ், பிரபு, சரத்குமார், திரிஷா, ஐஸ்வர்யா ராய் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் பொன்னியின் செல்வன் திரைப்படம் உருவாகியுள்ளது.
இரு பாகங்களாக உருவாகும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை லைகா நிறுவனத்துடன் இணைந்து மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் தயாரிக்கிறது. இரு பாகங்களில் பொன்னியின் செல்வன் முதல் பாகம் வருகிற செப்டம்பர் மாதம் 30-ம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் கதைமாந்தர்களை அவ்வபோது போஸ்டராக இணையதளத்தில் படக்குழு வெளியிட்டு வந்தது. இதையடுத்து வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டீசர், டிரைலர் மற்றும் பாடல்கள் வெளிவந்து ரசிகர்களிடம் கவனத்தைப் பெற்றன.
இதையடுத்து, பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு , ‘யு/ஏ’ தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும், படத்தின் கால அளவு 2 மணி நேரம் 47 நிமிடங்கள் ஓடக்கூடிய வகையில் இருக்குமென அறிவிக்கப்பட்டது.
நாளை பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், படக்குழுவினர் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய விக்ரம், பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு கிடைத்திருக்கும் எதிர்பார்ப்பு என்பது வியப்பளிக்கிறது. படத்தை விளம்பரப்படுத்த சென்ற இடங்களிலெல்லாம் நல்ல வரவேற்பு கிடைத்தது என்று தெரிவித்தார்.
மேலும், ‘திருவிளையாடலுக்குப் பிறகு அனைத்து தலைமுறையினரும் காண காத்திருக்கும் திரைப்படமாக பொன்னியின் செல்வன் இருப்பதை நினைக்கும்போது பெருமையாகவும், அதே சமயம் ரொம்ப பயமாகவும் உள்ளது. நாளை படத்தை காண வயதானவர்களும் வருவார்கள் என்பதால் திரையரங்க நிர்வாகத்தினர் அவர்களுக்கு உதவ வேண்டும்’ என்றும் விக்ரம் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஒரே நேரத்தில் ட்ரெண்டான ”ரஜினி – கமல்” புகைப்படங்கள்.. ஜெயிலர், இந்தியன் 2 லேட்டஸ்ட் அப்டேட்