விஜய் ஹசாரே கோப்பை போட்டியில் தமிழக வீரர் ஜெகதீசன் தொடர்ச்சியாக 4 சதங்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார்.
இந்தியாவில் 38 அணிகள் பங்கேற்றுள்ள விஜய் ஹசாரே 50 ஓவர் போட்டி பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. இதில், இன்று அவலூரில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் தமிழ்நாடு ஹரியாணா அணிகள் மோதி வருகின்றன.
இந்த ஆட்டத்தில் முதலில் டாஸ் வென்ற ஹரியாணா பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதைத்தொடர்ந்து தமிழக அணி பேட்டிங்கில் களமிறங்கியது. தமிழக அணி சார்பில் சாய் சுதர்சன் -ஜெகதீசன் ஜோடி தொடக்க ஜோடியாக களமிறங்கியது. இந்த ஜோடி 151 ரன்கள் சேர்த்தது. இதில் சாய் சுதர்சன் 67 ரன்கள் எடுத்தார்.
இதைத்தொடர்ந்து, ஜெகதீசன் தனது சதத்தை பூர்த்தி செய்தார். அவர் 123 பந்துகளில் 128 ரன்கள் எடுத்தார். இந்த சதத்தின் மூலம் லிஸ்ட் ஏ கிரிக்கெட் போட்டியில் தொடர்ச்சியாக 4 சதங்கள் எடுத்த 4-வது வீரர் என்கிற பெருமையை ஜெகதீசன் பெற்றுள்ளார். இதற்கு முன்பு குமார் சங்கக்காரா, அல்விரோ பீட்டர்சன், தேவ்தத் படிக்கல் ஆகியோர் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 4 சதங்கள் எடுத்துள்ளார்கள்.
மேலும், தற்போது நடைபெற்று வரும் விஜய் ஹசாரே போட்டியில் பிகாருக்கு எதிரான தமிழக அணியின் முதல் ஆட்டம் மழையால் கைவிடப்பட, அடுத்த ஆட்டத்தில் தமிழக அணி ஆந்திராவை எளிதாக வீழ்த்தியது.
இதைத்தொடர்ந்து, தமிழக அணி 3-வது ஆட்டத்தில் சத்தீஸ்கர் அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 4-வது ஆட்டத்தில் கோவா அணியை 57 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. தற்போதைய நிலவரப்படி, தமிழக அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 284 ரன்கள் எடுத்துள்ளது.
வெளியான நயன்தாராவின் புதிய திரைப்பட டீசர்; ‘இன்டர்வெல்’ இல்லாத ஒரு படம்..