வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சத்தியநாராயணன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.
வேங்கைவயல் – இந்த கிராமம் புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம் முத்துக்காடு ஊராட்சியைச் சேர்ந்தது. 30-க்கும் அதிகமான தலித் குடியிருப்புகள் உள்ள கிராமம் இது.
இந்த கிராமத்தின் குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டது தமிழக அளவில் பெரிய அதிர்வலைகளை இந்நிகழ்வு ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் தொடர்பாக வெள்ளனூர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வன்கொடுமைத் தடுப்பு சட்டம், இந்திய தண்டனைச் சட்டப்பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.ஆனாலும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இந்நிலையில், இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. விசாரணையின் முடிவில், சம்பவம் நடந்து 90 நாட்களுக்கு மேலாகியும் வழக்கு விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை எனத் தெரிவித்த நீதிபதிகள், வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சத்தியநாராயணன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைத்து உத்தரவிட்டனர்.
மேலும், சம்பவம் குறித்து விசாரித்து இரு மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்ட நீதிபதிகள், ஒரு நபர் ஆணையத்துக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.
பவானிசாகர் வாய்க்காலில் செத்து மிதந்த மீன்கள்; ரசாயனம் கலந்த நீர் தான் காரணமா?