இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக பார்க்கப்படும் ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் மாதம் 31-ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதனால் ஐபிஎல் குறித்த பல்வேறு தகவல்கள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன.
இந்த வகையில், ஐபிஎல் தொடரில் புதுவகையிலான விதிகள் அமல்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் முன்னமே வெளிவந்தது. அவற்றுள் தற்போது ‘இம்பாக்ட் வீரர் (impact player)’ முறையை அறிமுகப்படுத்துவதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.
இந்த ‘இம்பாக்ட் வீரர் (impact player)’ முறை மூலம் களத்தில் இல்லாத வீரரை அணிகள் புதியதாக ஆட்டக்களத்திற்குள் களமிறக்கலாம். அதாவது, ஆட்டத்தினுள் விளையாடும் 11 வீரர்களை அறிவித்து விட்டாலும், இந்த 11 வீரர்களில் இல்லாத ஒருவர் ஆட்டத்தின் போது களமிறக்கப்படுவர்.
முன்னதாக, ஆட்டக்களத்தில் எவருக்கேனும் காயம் ஏற்பட்டாலோ, மேற்கொண்டு விளையாட முடியாத சூழல் ஏற்பட்டாலோ அவருக்கு பதிலாக மாற்று வீரர் (substitute player) களமிறக்கப்படுவர். ஆனால், களமிறங்கும் வீரரால் பீல்டிங் மட்டுமே செய்ய முடியும்.
ஆனால், இந்த ‘இம்பாக்ட் வீரர் (impact player)’ முறையில் களமிறங்கும் வீரர் பந்துவீச்சு, பேட்டிங் என அனைத்திலும் ஈடுபடலாம். இம்முறையானது, முன்னதாக அக்டோபர் 11-ம் தேதி நடைபெற்ற இருபது ஓவர் சையது முஸ்டாக் அலி கோப்பையில் அமல்படுத்தப்பட்டது.
இம்பாக்ட் வீரர் முறை:
ஒவ்வொரு அணியும் ஆட்டத்துக்கு முன்பு வழக்கமாகக் கொடுக்கப்படும் 11 வீரர்களின் பெயர்களோடு 4 மாற்று வீரர்களின் பெயர்களையும் அளிக்க வேண்டும். அந்த 4 வீரர்களில் ஒருவரை ஆட்டத்தின் நடுவில் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த 4 வீரர்களும் இந்திய வீரர்களாக மட்டுமே இருக்க வேண்டும். அதேசமயம், ஒருவேளை ஓர் அணியில் 3 வெளிநாட்டு வீரர்கள் மட்டும் இருந்தால் மாற்று வீரராக வெளிநாட்டு வீரரைத் தேர்வு செய்துகொள்ளலாம்.
மாற்று வீரரை எப்போது வேண்டுமானாலும் சேர்க்கலாம். யாருக்குப் பதிலாக மாற்று வீரர் உள்ளே நுழைகிறாரோ அந்த வீரர் இனிமேல் ஆட்டத்தில் எவ்விதத்திலும் பங்கேற்க முடியாது.
மாற்று வீரர் அணியில் இடம்பெற்றாலும் 11 பேர் மட்டுமே பேட்டிங் செய்ய முடியும். ஆனால், பந்துவீச்சில் இப்படி இல்லை.
பந்துவீச்சை பொறுத்தமட்டில், ஒரு வீரர் 4 ஓவர்களை வீசினாலும், அந்த வீரருக்கு பதிலாக வரும் வீரரோ அல்லது வேறு எந்த வீரருக்கு பதிலாக வரும் வீரரோ மீண்டும் 4 ஓவர்களை வீசலாம்.
வாலி குறித்து வைரமுத்து போட்ட ட்விட்; நெகிழ்ச்சியில் ரசிகர்கள்!