பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையே இல்லாமல் செய்துவிடுவார்கள் என தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் காவி பாசிச எதிர்ப்பு மாநாடு கடந்த ஜூலை மாதம் 24-ம் தேதி நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக மாநில செயலாளர் நடராஜன் தலைமை தாங்கினார். தஞ்சாவூர் மாவட்ட செயலாளர் கண்ணன் வரவேற்றார்.
மேலும், இந்த மாநாட்டில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது :
உலகம் முழுவதும் பாசிசம் என்று சொல்லப்படுவது இந்தியாவில், இந்துத்துவமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. மேலும், இந்துத்துவா என்பது, ஒட்டுமொத்த இந்துக்களின் கோட்பாடு அல்ல. அது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கோட்பாடு.
மேலும், பாரதிய ஜனதா என்கிற அரசியல் கட்சியின், அணிகளாக இருக்கிற அனைத்தும் சங்பரிவார்கள்தான். அதனால்தான், மோடியும், அமித்ஷாவும் அந்த அமைப்புக்குள்ளேயே இருக்கிறார்கள்.
இந்நிலையில், பாரதிய ஜனதா கட்சி சாதுரியமாக, இன்றைக்கு ஆட்சியையும் கைப்பற்றி விட்டார்கள். அவர்கள் ஒருமுறைக்கு, இரண்டு முறை ஆட்சிப்பீடத்தில் அமர்ந்து விட்டார்கள். மூன்றாவது முறையும் அமர்ந்தால், என்ன ஆகும்?
இந்த ஆபத்தை, நாம் உணர வேண்டும். 2024 ம் ஆண்டில், பா.ஜ.க. மீண்டும், ஆட்சிக்கு வரக் கூடாது. மீண்டும் ஆட்சிக்கு வந்தால், என்ன நடக்கிறதோ, இல்லையோ இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தி, சிதைத்து, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையே இல்லாமல் செய்துவிடுவார்கள்.
இவ்வாறு தொல்.திருமாவளவன் கூறினார்.
இந்தியாவின் 15-வது குடியரசுத் தலைவரானார் திரௌபதி முர்மு