உசைன் போல்ட் சுமார் 103 கோடி ரூபாய் நிதி மோசடிக்கு ஆளாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜமைக்காவை சேர்ந்த உசைன் போல்ட் தடகளப் போட்டிகளில் பங்கேற்று பல்வேறு சாதனைகளை புரிந்தார். குறிப்பாக, உசைன் போல்ட் 100 மீட்டர் ஓட்டம், 200 மீட்டர் ஓட்டம், 4×100 ரிலேவில் உலக சாதனை படைத்துள்ளார். இவர் 2008-ஆம் ஆண்டு முதல் 2016-ஆம் ஆண்டு வரையிலான தொடர் ஒலிம்பிக்கில் 100 மற்றும் 200 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்றார். உலகம் முழுவதும் உசைன் போல்ட்டிற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் கடந்த 2017-ஆம் ஆண்டு சர்வதேச தடகளப் போட்டிகளில் இருந்து ஓய்வுப் பெற்றார்.
இந்நிலையில், உசைன் போல்ட்டின் வங்கி கணக்கில் இருந்த 12.7 மில்லியன் டாலர்கள் மாயமாகி உள்ளன. உசைன் போல்ட் ஜமைக்காவில் உள்ள கிங்ஸ்டன் நகரில் இயங்கி வரும் நிதி முதலீட்டு நிறுவனம் ஒன்றில் கணக்கு வைத்துள்ளார்.
அவரது கணக்கில் இருந்த 12.7 மில்லியன் (103 கோடி) டாலர்கள் மாயமாகி உள்ளன. தற்போது அந்த கணக்கில் வெறும் 12 ஆயிரம் டாலர்கள் மட்டுமே இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இத்தகவலை உசைன் போல்ட்டின் அவரது வழக்கறிஞர் லின்டன் கார்டன் தெரிவித்துள்ளார்.
மேலும், லின்டன் கார்டன் கூறுகையில், அந்த நிறுவனம் தங்களது நிதியை திரும்ப தராத பட்சத்தில் நீதிமன்றத்தை நாடும் திட்டம் தங்களுக்கு இருப்பதாகவும், இந்த மோசடியில் இருந்து போல்ட் தனது பணத்தை வெற்றிகரமாக மீட்பார் என நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அந்த வங்கி கூறுகையில், அதில் தங்கள் நிறுவனத்தில் முன்னாள் ஊழியர் ஒருவர் மோசடி செய்து பல்வேறு கணக்குகளில் இருந்து பணத்தை தவறான வழியில் கையாண்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் குறித்து ஜமைக்கா நாட்டின் நிதி மோசடி தடுப்புக் குழு விசாரித்து வருவதாக தெரிவித்துள்ளது.
மண்டல பூஜை நிறைவு; சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு