திரிபுரா மாநில முதல்வரும் மருத்துவருமான மாணிக் சஹா பத்து வயது சிறுவனின் வாய்க்குள் இருந்த நீர்கட்டியை அகற்றுவதற்கான சிகிச்சையை வெற்றிகரமாக செய்த சம்பவம் பாராட்டை பெற்றுள்ளது.
திரிபுரா மாநிலத்தின் முதல்வரான மருத்துவர் மாணிக் சஹா, முதல்வராக பதவியேற்று 7 மாதங்களே ஆகிறது. இந்நிலையில், அவர் நேற்று முன்தினம் திரிபுரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்றார். அப்போது அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து மாணிக் சஹா மருத்துவர்கள் குழு உதவியுடன் 10 வயதுடைய சிறுவனின் வாய்க்குள் இருந்த நீர்க்கட்டியை அகற்றுவதற்கான அறுவை சிகிச்சையை காலை 9.30 மணி அளவில் வெற்றிகரமாக செய்து முடித்தார்.
இதன்பிறகு, மருத்துவரும் முதல்வருமான மாணிக் சஹா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது மாணிக் சஹா, அன்று காலை எந்த நிர்வாக அல்லது அரசியல் பணிகளிலும் ஈடுபடாமல் வந்ததாகவும், அறுவை சிகிச்சைக்கு பிறகு சிறுவன் நலமாக இருப்பதாகவும் கூறினார். மேலும் அவர், இந்த நிகழ்வு மிகவும் ஆறுதல் அளிப்பதாகவும் தான் 20 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு பணி புரிந்ததாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய முதல்வர், பல மாத இடைவெளிக்கு பிறகு தான் அறுவை சிகிச்சை செய்ததாகவும், ஆனால் அதில் எந்த சிரமமும் இல்லை என்றும் கூறினார். மருத்துவரும் முதல்வருமான மாணிக் சஹாவின் இந்தச் செயல் பலரின் பாராட்டை பெற்றுள்ளது.
தனுஷ் இயக்கப்போகும் திரைப்படத்தின் பெயர் இதுதானா?