தேர்வுக்கு வந்த பெண்ணின் குழந்தையை பெண் காவலர்கள் தாலாட்டி தூங்க வைத்துள்ளனர்.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் சார்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காவல் உதவி ஆய்வாளர் பணிக்கான எழுத்து தேர்வு நடைபெற்றது. இந்த காவல் உதவி ஆய்வாளர் பணிக்கான எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற 338 பெண்களுக்கு திருச்சி ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறும் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடல்தகுதி தேர்வில் பங்கேற்க அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது..
இதைத்தொடர்ந்து, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடல் தகுதி தேர்வு திருச்சி ஆயுதப்படை மைதானத்தில், திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் மேற்பார்வையில் டி.ஐ.ஜி சரவண சுந்தர், ஜெயபாரதி ஆகியோர் முன்னிலையில் சான்றிதழ் சரிபார்க்கும் பணி நேற்று தொடங்கியது.
இந்த பணி நடைபெறும்போது, தேர்வில் பங்கேற்றவர்களின் மற்ற உறவினர்கள் நண்பர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. மேலும், தேர்வாளர்கள் கொண்டு வந்த செல்போன் நுழைவு பகுதியிலேயே வாங்கி வைக்கப்பட்டன. உடற்தகுதி தேர்வு முழுவதும் வீடியோவில் ஒளிப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், இந்த உடல் தகுதி தேர்வில் கலந்து கொண்ட பெண் ஒருவர் தனது குழந்தையை மைதானத்தில் உள்ள மரத்தின் கிளையில் சேலையில் தொட்டில் கட்டி தூங்க வைத்தார்.
தூங்கிக் கொண்டிருந்த குழந்தை திடீரென கண்விழித்தது. உடனே அக்குழந்தை அழ ஆரம்பித்து விட்டது. இதனை கண்ட பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த பெண் காவலர்கள் குழந்தையின் தொட்டிலை ஆட்டி தாலாட்டு பாடி அக்குழந்தையை தூங்க வைத்தனர். இச்செய்தி வேகமாய் பரவ மக்கள் பெண் காவலர்களை பாராட்டி வருகின்றனர்.
அரசுப் பள்ளிகளில் இனி திரைப்படங்கள் – வெளிவந்த சுற்றறிக்கை!