தகாத உறவால் கருக்கலைப்பு மாத்திரைகள் அதிகம் பயன்படுத்திய இளம் பெண்களின் உடல்நிலை பாதிப்படைந்ததை அடுத்து மருந்து கடைகளில் மருத்துவ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர்.
உலகிலேயே பின்னலாடை தொழிலுக்கென்று மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்றாக உள்ள தமிழ்நாட்டின் மிக முக்கிய மாவட்டமான திருப்பூர் மாவட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த ஆண்கள், பெண்கள் மட்டுமல்லாது வடமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களும் என சுமார் 8 லட்சத்திற்கும் அதிமானோர் இங்கு தங்கி பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் திருப்பூர் வீரபாண்டி, பலவஞ்சிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி அங்குள்ள பனியன் கம்பெனிகளில் பணிபுரிந்து வரும் தமிழகம் மற்றும் வடமாநிலத்தை சேர்ந்த இளம்பெண்கள் பலர் உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளில் சேர்ந்துள்ளனர்.
இது போன்று திருமணமாகாத ஏராளமான பெண்கள் தொடர்ந்து சிகிச்சைக்காக வந்து அரசு மருத்துவமனைகளில் சேரவே சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிர்ச்சியாகி, அப்பெண்களிடமே விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அந்த விசாரணையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட இளம்பெண்கள் அனைவரும் கருக்கலைப்பு மாத்திரைகளை பயன்படுத்தியதாலையே அவர்களுக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டது தெரியவந்துள்ளது. மேலும் திருமணத்திற்கு முன்பே பெண்கள் தங்கள் விரும்புபவர்களுடன் தகாத உறவு வைத்து கொள்வது என்பது சாதாரண ஒரு நிகழ்வாக மாறிவிட்டது.
இந்த நிலையில் திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களில் பணியாற்றும் இளம்பெண்கள் பெரும்பாலானோர் தகாத உறவு கொண்டு அதனால் கர்ப்பமாகி, அது தங்களது பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு தெரியாமல் இருக்க மருந்துக்கடைகளில் கருக்கலைப்பு மாத்திரைகளை வாங்கி பயன்படுத்தியுள்ளனர்.
மருத்துவர்களின் ஆலோசனை இல்லாமல் கருக்கலைப்பு மாத்திரைகளை உட்கொள்வது என்பது மிகவும் ஆபத்தான ஒன்று. இதனாலயே மருந்துக்கடைகளில் கருக்கலைப்பு மாத்திரைகள் வழங்கக்கூடாது என்ற விதிமுறை இருந்தும், அந்த விதிமுறைகளை மீறி திருப்பூர் மாநகரில் உள்ள சில மருந்துக்கடைகளில் கருக்கலைப்பு மாத்திரைகள் ரூபாய் 1000, 1500 என கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது அதிகாரிகள் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து திருப்பூர் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் திருப்பூர் வீரபாண்டி, பல்லடம் சாலை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் உள்ள மருந்துக்கடைகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.இந்த சோதனையில் மருந்து கடைகளில் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்டு வந்த கருக்கலைப்பு மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டதோடு, மருந்தக உரிமையாளர்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது .