கடந்த வாரத்திலிருந்து கேரள மாநிலத்தில் தக்காளி காய்ச்சல் என்னும் புதிய நோய் பரவி வருகிறது. குழந்தைகளை அதிகம் தாக்கும் இந்த நோய், தோல் எரிச்சலையும், திரவ இழப்பினையும், சருமத்தில் சிகப்பு வண்ணக் கட்டிகளையும் ஏற்படுத்துகிறது. இந்த கட்டிகள் பார்ப்பதற்கு தக்காளிகள் போல இருப்பதால் இந்த நோய்க்கு தக்காளிக் காய்ச்சல் என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த புதிய வகையான காய்ச்சல் பரவி வருவதால் கேரளத்தின் அண்டை மாநிலமாகிய தமிழகம், மற்றும் கர்நாடக எல்லையோரங்களில் தீவிர கண்காணிப்பு நடைமுறை படுத்தப்பட்டுள்ளது.
கர்நாடகாவின் கேரள எல்லை பகுதிகளான மங்களூரு, உடுப்பி, குடகு, சாம்ராஜ்நகர் மற்றும் மைசூர் நகரங்களில் தீவிர கண்காணிப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கேரளாவிலிருந்து கர்நாடகம் வரும் மக்களுக்கு தொற்று பாதிப்பு இருக்கிறதா என்று சோதித்த பிறகே அனுமதியளித்து வருகின்றனர்.
தமிழகத்தினைப் பொறுத்த வரையில் 39 நபர்களுக்கு புதிதாய் கொரோனா தொற்று பரவியுள்ளது. கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில், கேரளாவில் புதிய காய்ச்சல் பரவுவதால் கோயம்புத்தூரில் உள்ள கேரளா எல்லையான வாளையார் சோதனைச் சாவடியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப் பட்டுள்ளது. இதற்காக வருவாய் மற்றும் மருத்துவம் சார்ந்த அதிகாரிகளும், காவல்துறை அதிகாரிகளும் கொண்ட குழு அனுப்பப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கோவை மாவட்டத்தின் சுகாதாரத் துறை துணை இயக்குனர் டாக்டர் அருணா கொடுத்த பேட்டியில், ‘வாளையார் சோதனைச் சாவடிக்கு மருத்துவர், காவலர்கள், வருவாய்த் துறை அதிகாரிகள் கொண்ட மூன்று குழுவானது அனுப்பப்பட்டுள்ளது. மற்ற காய்ச்சல்களைப் போல, தக்காளி காய்ச்சலும் பரவும் தன்மை கொண்டது. இந்த காய்ச்சல் பாதிக்கப்பட்ட நபர் தன்னைத் தனிமைப் படுத்திக்கொள்வதின் மூலம் பிறருக்கு பரவாமல் தடுக்க முடியும்.’ என்று கூறியுள்ளார்.
‘இந்த நோய்க்கு இதுவரை சரியான மருந்து கண்டறியப்படாததால், தொற்றுக்கு ஆளான நபர் தன்னை தனிமைப் படுத்திக்கொள்வதோடு மட்டுமல்லாமல், மருத்துவரிடம் சரியான ஆலோசனைப் பெறுவதின் மூலம் குணமடையலாம்.’ என்றும் கூறியுள்ளார்.
குழந்தைகளுக்கு இந்த நோய் ஏற்பட்டிருப்பின் சிகப்புக் கட்டிகளை உடைத்து விடாத வண்ணம் பாத்துக்க கொள்ள வேண்டும், நீரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளதால் நீர்ச் சத்து அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும். நோய் பாதித்த குழந்தைகளின் உடைமைகளை கிருமி நீக்கம் செய்வதோடு, இருக்கும் இடத்தினையும் சுத்தமாக வைத்துக்கொள்வதில் மூலம் இந்த நோயிலிருந்து தப்பிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
கொரோனா நோயினால் இரண்டு வருடங்களாக அவதிப்பட்டு வந்த நிலையில் தற்போது புது புது நோய்கள் தோன்றி பாதிப்பினை ஏற்படுத்திக் கொண்டிருப்பது மக்களிடையே அச்சத்தினை ஏற்படுத்தி உள்ளது.
ஆபரேஷன் சக்தி: 24 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியா நிகழ்த்திய அளப்பரிய சாதனை!