2022-2023 தமிழக வரவு செலவுத் திட்டத்திற்கான அமைச்சரவைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் இன்று மாலை ஐந்து மணிக்கு நடைபெற உள்ளது. மேலும், வரவு செலவுக் கணக்கில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பதற்கான அமைச்சரவை கூட்டம் தான் இது.
முன்பே எந்தெந்த திட்டங்களை வரவு செலவுக் கணக்கில் சேர்க்கலாம் என்பதை, விவசாயிகள், தொழில் முனைவர்கள், அமைச்சர்கள் என அனைவரும் பங்கேற்று துறைவாரியாக கருத்துக் கேட்பு கூட்டங்களை அமைச்சர்கள் நடத்தி வந்தனர்.
இந்நிலையில் இன்று இக்கூட்டத்தில் அனைத்து அமைச்சர்கள், தலைமைச் செயலர் என பல்வேறுபட்ட துறையின் செயலர்கள் பங்கேற்க உள்ளனர். இக்கூட்டம் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது.
மேலும் இக்கூட்டத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டமென சில முக்கியத் திட்டங்கள் பற்றிய ஆலோசனை நடத்தலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதையடுத்து வரவு செலவுக் கணக்கிற்கான தயாரிப்பு பணிகள் வேகமாக நடைப்பெற்று வருகின்றன. இதைத்தொடர்ந்து, மறுநாள் விவசாயிகளுக்கான வேளாண்மைத் துறை தனி வரவு செலவுக் கணக்கு கூட்டம் கூடுகிறது. விவசாயிகள் இதைப் பெரிதும் எதிர்ப்பார்த்து உள்ளனர். நெல் கொள்முதல் போன்ற பிரச்சனைகளில் இருந்து வரும் குழப்பங்களுக்கு தீர்வுகள் எட்டப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.