பீகார் மாநிலம், பகல்பூர் எல்லைக்குட்பட்ட கஜ்பாலிசாக் பகுதியில் பட்டாசு வெடித்ததால் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டிருக்கிறது. இதில் உயிர் இழந்தோரின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.
கஜ்பாலிசாக் பகுதியில் வசித்து வந்த மகேந்திர மண்டல் தனது வீட்டிலேயே சட்ட விரோதமாக பட்டாசு தொழிற்சாலையை நடத்தி வந்திருக்கிறார். இந்தநிலையில் நேற்று காலை பட்டாசு தயாரிக்கும் பொழுது வெடி விபத்து ஏற்பட்டது.
இதில் மகேந்திர மண்டல் என்பவரின் தொழிற்சாலையுடன் சேர்த்து மூன்று கட்டிடங்கள் இடிந்து தரைமட்டம் ஆயின. பயங்கர வெடி விபத்தால் அங்கு வேலை செய்த தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். இதையடுத்து தகவல் அறிந்து வந்த காவல் துறையினரும் தீயணைப்பு துறையினரும் அங்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். மீட்பின் போது சம்பவ இடத்திலேயே 12 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர்.
அங்கிருந்து மீட்கப்பட்டவர்களை அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர் மீட்புக் குழு. இதையடுத்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.
இச்சம்பவத்தை வைத்து, காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல், மகேந்திர மண்டல் 2008 ஆம் ஆண்டே சட்ட விரோதமாக பட்டாசு தொழிற்சாலை நடத்தியதில் தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது.
மேலும் பகல்பூரில் நடந்த இச்சம்பவத்தை தீர விசாரித்து அறிக்கையைச் சமர்பிக்கும்படி பீகார் மாநில முதலமைச்சர் நிதீஷ் குமார், தலமைச் செயலருக்கும் காவல் துறையினருக்கும் உத்திரவிட்டுள்ளார்.