அனைத்துத் துறைகளிலும் 4 லட்சத்திற்கும் கூடுதலான காலியிடங்கள் உள்ள நிலையில், அவற்றை அடுத்த 3 ஆண்டுகளில் 4 தவணைகளில் நிரப்புவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பாமக நிறுவனர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:
தமிழ்நாட்டில் மாவட்ட துணை ஆட்சியர் உள்ளிட்ட முதல் தொகுதி பணிகளுக்கான தேர்வு வரும் ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்படும்; நவம்பர் மாதத்தில் முதல் நிலைத் தேர்வு, 2024 ஜூலையில் முதன்மைத் தேர்வு நடத்தப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி அறிவித்திருக்கிறது. இது வரவேற்கத்தக்கது.
டி.என்.பி.எஸ்.சி அடுத்த ஆண்டு மிகக்குறைந்த பணிகளுக்கு தேர்வு நடத்துவதையும், முதல் தொகுதி, இரண்டாம் தொகுதி, மூன்றாம் தொகுதி பணிகளுக்கு தேர்வு நடத்தப்படாததையும் சுட்டிக்காட்டியிருந்தேன். அதையேற்று முதல் தொகுதி தேர்வுகளை சேர்த்து புதிய பட்டியலை வெளியிட்டதில் மகிழ்ச்சி!
முதல் தொகுதி பணிகளுக்கான முதல்நிலை தேர்வுகளுக்கும், முதன்மை தேர்வுகளுக்கும் இடையே 9 மாத இடைவெளி மிகவும் அதிகம். இதை குறைக்க வேண்டும். ஆண்டுக்கு ஒருமுறை முதல் தொகுதி பணிகளுக்கு தேர்வுகள் நடத்தப்படுவதை டி.என்.பி.எஸ்.சி உறுதி செய்ய வேண்டும்!
இரண்டாம் தொகுதி, மூன்றாம் தொகுதி பணிகளுக்கும் தேர்வுகள் அறிவிக்கப்பட வேண்டும். அனைத்துத் துறைகளிலும் 4 லட்சத்திற்கும் கூடுதலான காலியிடங்கள் உள்ள நிலையில், அவற்றை அடுத்த 3 ஆண்டுகளில் 4 தவணைகளில் நிரப்புவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
குடிநீர் வராததால் ஆத்திரமடைந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்!