திருநெல்வேலி மாவட்டத்தில் கல்குவாரியில் பாறை சரிந்த விபத்தில், தேடப்பட்டு வந்த ஒப்பந்ததாரர் செல்வராஜ் மற்றும் அவருடைய மகன் குமார் ஆகிய இருவரும் மங்களூருவில் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் பொன்னாக்குடி அருகே அடைமிதிப்பான்குளம் குவாரி உள்ளது. இக்குவாரியில் கடந்த மே மாதம் 14 ஆம் தேதி சனிக்கிழமை இரவு நேரத்தில், திடீரென ஏற்பட்ட பாறைச்சரிவில், ஆறு தொழிலாளர்கள் கல்குவாரிக்கு உள்ளே சிக்கி கொண்டனர்.
இந்நிலையில் அடுத்த நாளான 15 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலையில், ஹிட்டாச்சி ஆபரேட்டர்கள் முருகன் மற்றும் விஜய் ஆகிய இருவர் உயிரோடு மீட்கப்பட்டனர். அன்றைய தினத்தில் மூன்றாவதாக மாலையில் ஆப்பரேட்டர் செல்வம் மீட்கப்பட்டார். ஆனால், துரதிருஷ்டவசமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார்.
இரண்டாம் நாளான திங்கட்கிழமை 16 ஆம் தேதி, நான்காவது நபராக லாரி கிளீனர் முருகனை சடலமாக மீட்டனர். இதனைத் தொடர்ந்து மூன்றாம் நாளான செவ்வாய்க்கிழமை 17 ஆம் தேதி மதியம், ஐந்தாவது நபரின் உடல், பாறை குவியலுக்குள் இருப்பது கண்டறிந்தனர். ஆனால், பாறைகளுக்கு இடையே அவரது உடல் சிக்கி இருந்தது. ஆனாலும், இரவில் மீட்புப் பணியைத் தொடர்ந்தனர். ஆனால், எதிர்பாரா விதமாக, மீண்டும் சிறிய அளவில் பாறைச் சரிவு ஏற்பட்டதால் மீட்புப்பணி கைவிடப்பட்டது. பிறகு, அடுத்த நாள் பாறைகளில் வெடி மருந்துகளை வைத்து தகர்த்து, பாறையில் சிக்கிக் கொண்டவரின் உடலை எடுக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, அன்றைய தினம் மாலை 6.45 மணிக்கு ஐந்தாவது நபரான செல்வக்குமார் சடலமாக மீட்கப்பட்டார்.
கல்குவாரியில் நடந்த விபத்து குறித்து, விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் செல்வராஜ் மற்றும் அவரது மகன் குமார் தலைமறைவாகினர். இருவரும் தேடப்பட்டு வந்த நிலையில், மங்களூருவில் தலைமறைவாகி இருந்த அவர்கள் இருவரையும், நாங்குநேரி ஏ.எஸ்.பி. ராஜா சதுர்வேதி தலைமையிலான தனிப்படை காவல்துறை கைது செய்தனர்.
கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது; உலக தேனீக்கள் தினம்!!