நாடு முழுவதும் சுமார் 50 கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு நண்பருக்கு பிறந்தநாள் பரிசு கொடுத்ததில் கொள்ளையர்கள் மாட்டிக்கொண்டனர்.
கொள்ளை மற்றும் வழிப்பறி குற்றங்களுக்காக லஷ்மண் மற்றும் விஷ்ணு ஆகிய இருவரும் தானே மத்திய சிறைச்சாலையில் சிறை தண்டனை அனுபவித்து வந்தனர். இந்நிலையில், இவர்கள் இருவரும் சிறையில் நண்பர்களாக மாறினர்.
பிறகு சிறைக்கு வெளியே வந்த இருவரும் மீண்டும் திட்டமிட்டு கொள்ளைச் சம்பவங்களை அரங்கேற்றினர். குறிப்பாக இவர்கள் பராமரிப்பு வேலைகள் நடந்து வரும் வீடுகளை குறிவைத்து கொள்ளையடிக்கத் தொடங்கினர்.
கருப்பு துணிகளை அணிந்துகொண்டு கொள்ளையடித்த இவர்கள் ஒரு வீட்டில் இருந்து செல்போனை திருடி உள்ளனர். இப்படி பல கொள்ளை மற்றும் வழிபறிகளில் ஈடுபட்ட இவர்களை காவல்துறையினர் கண்டுப்பிடிப்பதற்கு சிரமப்பட்டனர்.
இதனிடையே, இவர்கள் கொள்ளையடித்த செல்போனில் புதிய சிம் கார்டு சிக்னல் காட்டுவதை காவல்துறையினர் கண்டறிந்தனர். இதை வைத்து ஆய்வு செய்ததில், செல்போனை வைத்திருந்த நபரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அந்த நபருக்கு, அவரது நண்பர்கள் செல்போனை பரிசு அளித்ததாக தெரிவித்ததை வைத்து, விசாரணை நடத்தினர். இந்நிலையில் அந்த நபருக்கு பரிசு அளித்ததும் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட லஷ்மண் மற்றும் விஷ்ணு என தெரியவந்தது.