நீதிபதிகளை விமர்சிக்க எல்லையுண்டு என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
கிறிஸ்தவ தேவாலயங்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருவதாகவும், அவற்றைத் தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரியும் பீட்டர் மச்சோடா மற்றும் சிலர், உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
அந்த மனுவில் இனம், மொழி, ஜாதி அடிப்படையில் நிகழ்த்தப்படும் குற்றங்களில் கடந்த 2018-ம் ஆண்டு மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் பிறப்பித்த வழிகாட்டுதல்களை அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்த மனு, உச்சநீதிமன்ற நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், சூர்யகாந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று (ஜூலை 28) பரிசீலனைக்கு வந்தது. அப்போது, இந்த மனு மீதான விசாரணையைத் தொடங்க வேண்டும் என மனுதாரர் தரப்பு வழக்குரைஞர் கோரிக்கை விடுத்தார்.
இதுகுறித்து நீதிபதிகள் கூறியதாவது:
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகளில் ஒருவருக்கு கடந்த முறை கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால், இந்த வழக்கை உடனடியாக விசாரிக்க முடியவில்லை. ஆனால், உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தாமதமாவதாக, நீங்கள் செய்தி வெளியிட்டுள்ளீர்கள்.
மேலும், நீதிபதிகளை விமர்சிப்பதற்கு ஒரு எல்லை உண்டு. எங்களுக்கு கொஞ்சம் கால அவகாசம் கொடுங்கள். இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாவிட்டால் மேலும் ஒரு செய்தியை வெளியிடுவீர்கள்.
இவ்வாறு, நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
கைது செய்யும் அதிகாரம் அமலாக்கத்துறைக்கு உள்ளது- உச்சநீதிமன்றம்