ஜம்மு – காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகரின் சிவபோரா என்ற பகுதியில் கட்டப்பட்டுள்ள மல்டிஃபிளக்ஸ் திரையரங்கை துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா இன்று திறந்து வைக்கவுள்ளார்.
ஜம்மு – காஷ்மீரில் 1980-ம் ஆண்டு வரையில் 12 திரையரங்குகள் செயல்பட்டன. அதன்பின்பு, தீவிரவாத அச்சுறுத்தலால் திரையரங்குகள் மூடப்பட்டன. இதற்கு பின்பு, 1990-களில் மீண்டும் திரையரங்கு திறப்பு குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டன. ஆனால் மீண்டும் 1999-களில் திரையரங்குகள் மூடப்பட்டன.
இந்நிலையில்தான், ஜம்மு – காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகரின் சிவபோரா என்ற பகுதியில் மல்டிஃபிளக்ஸ் திரையரங்குகள் திறக்கப்படவுள்ளன. இந்த திரையரங்குகளை இன்று துணைநிலை ஆளுநர் திரையரங்கை திறந்து வைக்கிறார். 3 திரைகளுடன் 520 இருக்கைகள் கொண்ட மல்டிஃபிளக்ஸ் திரையரங்கிற்கு ஐநாக்ஸ் நிறுவனம் பங்குதாரராக இருக்கிறது. தற்போது இரண்டு திரைகளிலும், அக்டோபரில் மூன்றாவது திரையிலும் படம் திரையிடப்படவுள்ளது.
திரையரங்கம் சார்பில், ‘அமிர்கான் நடித்து வெளியாகியுள்ள லால் சிங் சத்தா திரைப்படம் இன்று சிறப்பு காட்சியாக வெளியாகவுள்ளது. செப்டம்பர் 30-ம் தேதி பொதுமக்களுக்காக திரையரங்கு திறக்கப்படும்போது முதல் காட்சியாக விக்ரம் வேதா திரையிடப்படவுள்ளது என்றார். மேலும், மற்றொரு திரையில் பொன்னியின் செல்வன் திரையிடப்படவுள்ளதாக’ தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, தெற்கு காஷ்மீரின் புல்வாமா, ஷோபியான் ஆகிய மாவட்டங்களில் பல்நோக்கு திரையரங்குகளை துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார்.