ஸ்விகி ஊழியர்கள் திடீரென்று இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மிகவும் புகழ்பெற்ற ஆன்லைன் உணவு விநியோக நிறுவனம்தான், ஸ்விகி (swiggy) நிறுவனம். இந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் கூட்டமாகக் கூடிய ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு நிறுவனத்தின் செயலுக்கு எதிரான தங்களின் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
ஸ்விகி நிறுவனத்தின் புதிய விதிமுறைகளே ஊழியர்களின் போராட்டத்திற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஸ்விகியில் பணிபுரியும் ஊழியர்கள் தெரிவித்துள்ளதாவது :
ஊழியர்களுக்கான வேலை நேரத்தை மாற்றியமைத்து ஸ்லாட் வரிசையில் ஆர்டர்களை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர். அதேபோல வாரத்திற்கு, நாள் ஒன்றுக்கு என கொடுக்கப்படும் ஊக்கத்தொகையையும் நிறுத்தி உள்ளனர். இதன்படி, எங்களின் வேலை நேரம் 16-லிருந்து 18 மணி நேரமாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும், எவ்வளவு நேரம் வேலை செய்தாலும், எவ்வளவு ஆர்டர் எடுத்தாலும் ஒரே அளவு ஊதியம்தான் கிடைக்கும் என்றும் கூறியுள்ளனர். நாங்கள் யாரும் சம்பள உயர்வு கேட்கவில்லை. ஸ்விகி நிறுவனத்தின் பழைய நடைமுறையையே பின்பற்ற வேண்டும் எனக் கேட்கிறோம்.
இவ்வாறு ஸ்விகியில் பணிபுரியும் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: உணவு வாங்கினால் முத்தம் இலவசமா? சொமாட்டோ ஊழியர் செய்த காரியம்