தமிழகத்தில் சுனாமி ஏற்பட்ட 18-வது நினைவு தினம், இன்று டிசம்பர் 26 ஆம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
18 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது, 2004 ஆம் ஆண்டு இதே நாள் டிசம்பர் 26 ஆம் தேதி அதிகாலை இந்தோனேசியாவில் உள்ள சுமத்ரா தீவு கடல் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக இந்தியா, இந்தோனேசியா, இலங்கை, மாலத்தீவு, மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட 14 நாடுகளில் கரையோரம் இருந்த 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் ஆழிப்பேரலையால் பலியானார்கள்.
இந்த சுனாமி தாக்குதலில் தமிழக கடற்கரை பகுதிகள் அதிகளவில் பாதிக்கப்பட்டன. தமிழகத்தில் நாகபட்டின கடற்கரையில் 6 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகினர். அதேபோல் கடலூரில் 600-க்கும் மேற்பட்டோரும், சென்னையில் 200-க்கும் மேற்பட்டோரும் உயிரிழந்தனர். ஒரு பக்கம் உயிர்சேதங்களும் மறுபக்கம் பொருட்சேதங்களும் ஏற்பட்டன.
இதனை நினைவுகூறும் விதமாகவும், இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் ஆண்டுதோறும் இன்றைய நாளில் கடலோரம் வசிக்கும் மக்கள் கடலில் பால் ஊற்றி பூக்களை தூவுவர்.
இந்நிலையில், சுனாமி தாக்கிய 18-ஆவது நினைவு தினத்தையொட்டி, பொது மக்கள் தங்களின் அஞ்சலியை செலுத்தி வருகின்றனர். மேலும், இந்த நிகழ்வுகளில் அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டு மீனவ மக்களுக்கு ஆறுதல் கூறினர். குறிப்பாக நாகை மாவட்டத்தில் வர்த்தகர் சங்கம் மற்றும் பேராலயம் சார்பில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது.
மெரினாவில் நடைபெற்ற பேஷன் ஷோ; ஆச்சர்யப்பட்ட மக்கள்!