ராமஜெயம் கொலை வழக்கில் தமிழகத்தின் பிரபல ரவுடிகள் 13 பேர் திருச்சி நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம். தொழிலதிபரான இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு மார்ச் 29 தேதி நடைபயிற்சி சென்றபோது, கடத்தி செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டார். அவரின் உடல் திருச்சி – கல்லணை சாலையில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
தமிழகத்தையே மிகவும் பரபரப்பாக்கிய இந்த கொலை சம்பவம் குறித்து முதலில் திருச்சி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதன்பிறகு, வேறு சில விசாரணைப் பிரிவுகளுக்கும் வழக்கு மாற்றப்பட்டு விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், உண்மை சோதனை நடத்துவதற்காக தமிழகத்தின் பிரபல ரவுடிகள் 13 பேருக்கு திருச்சி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமென்று சம்மன் அனுப்பட்டது. இதன்பேரில் மோகன்ராம், தினேஷ், நரைமுடி கணேசன், உள்ளிட்ட 13 பேர் திருச்சி நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
இவர்களுக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என சிறப்பு புலனாய்வு தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. இதற்கு எதிர்த்தரப்பு வழங்கறிஞர்கள் மறுப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து, இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இதனை வருகிற 7 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து, மோகன்ராமின் வழங்கறிஞர் அலெக்ஸ் என்பவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், அரசியல் காரணங்களுக்காகவே 13 பேரை மட்டும் அழைத்துள்ளனர். உண்மை கண்டறியும் சோதனைக்கு நீதிமன்ற அனுமதியை எஸ்.பி ஜெயக்குமார்தான் கோர முடியும் என்ற நிலையில், அதற்கு மாறாக ராமஜெயம் கொலை வழக்கில் சிறப்பு புலனாய்வு குழுவின் டிஎஸ்பி அனுமதி வேண்டி மனு தாக்கல் செய்துள்ளதாகவும், இது உயர்நீதிமன்ற வழிக்காட்டுதலுக்கு எதிரானது என்றும் தெரிவித்தார்.
மேலும் அவர், இது தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவின் எஸ்.பி மீண்டும் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும், வருகிற 7-ம் தேதி மீண்டும் அனைவரும் ஆஜராக வேண்டும் என நீதிபதி சிவக்குமார் உத்தரவிட்டுள்ளதாகவும் கூறினார்.
இதையும் படிங்க: மீண்டும் ‘தடித்த வார்த்தை பேசி’ சர்ச்சையில் சிக்கிய பொன்முடி! சொந்த தொகுதியில் நடந்த பரபரப்பு