ஏடிபி டூர் பைனல்ஸ் போட்டியில் அமெரிக்காவின் இளம் வீரர் டெய்லர் ஃப்ரிட்ஸிடம் 7-6, 6-1 என்ற செட் கணக்கில் ரபேல் நடால் தோல்வியடைந்தார்.
ஏடிபி டூர் பைனல்ஸ் போட்டியென்பது, உலகின் தலைசிறந்த 8 வீரர்கள் பங்கேற்கும் ஆண்டின் இறுதி போட்டியாக நடத்தப்படுகிறது. இப்போட்டி இந்த ஆண்டு இத்தாலியில் உள்ள டுரின் எனும் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இன்று இரு ஆட்டங்கள் நடைபெற்றன.
இதில் முதல் ஆட்டத்தில் நார்வேயின் கேஸ்பர் ரூட் மற்றும் கனடாவின் ஃபெலிக்ஸ் அலியாசிம் மோதினர். இதில் கேஸ்பர் ரூட் 7-6, 6-4 என ஃபெலிக்ஸை வீழ்த்தினார். இதைத்தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் நடால் மற்றும் ஃப்ரிட்ஸ் மோதினர்.
இந்த ஆட்டத்தின் முதல் செட்டில் இரு வீரர்களும் மாறி, மாறி புள்ளிகளைக் குவித்தனர். இறுதியில் 7-6 என டெய்லர் அந்த செட்டை கைப்பற்றினார். இரண்டாவது செட்டில் நடாலுக்கு வாய்ப்பு தராமல் ஃப்ரிட்ஸ் முழு ஆதிக்கம் செலுத்தி 6-1 என செட்டைக் கைப்பற்றினார்.
அமெரிக்காவின் இளம் வீரர் டெய்லர் ஃப்ரிட்ஸிடம் 7-6, 6-1 என்ற செட் கணக்கில் ரபேல் நடால் அதிர்ச்சித் தோல்வியடைந்த சம்பவம் பெரும் பேசுபொருளாய் மாறியுள்ளது.
மேலும், ஏடிபி டூர் பைனல்ஸில் இதுவரை ஒருமுறை கூட நடால் பட்டம் வெல்லவில்லை. ஏடிபி டூர் போட்டியை பொறுத்தவரை அவர் தொடர்ந்து தோல்வி பயணத்திலே உள்ளார். அதேசமயம் மற்றொரு பிரபல டென்னிஸ் வீரரான ஜோகோவிச் இதுவரையில் 5 முறை ஏடிபி டூர் பைனல்ஸ் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ‘பொல்லாரட்’ அறிவிப்பால் ஏமாற்றத்தில் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள்!