ஐபிஎல் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக மேற்கிந்தியத் தீவுகளின் ஆல்ரவுண்டர் பொல்லாரட் அறிவித்துள்ளார்.
அண்டை நாட்டு கிரிக்கெட் வீரர்கள் நம்மில் ஒருவராகவோ, நாம் கொண்டாடக் கூடியவராகவோ இருப்பதென்பது அரிதான விஷயம். அண்டை நாட்டு கிரிக்கெட் வீரர்களை புகழ்ந்தாலும், அவர்களுடன் உறவாடுவது என்பது மிகவும் குறைவே. ஆனால், மேற்கிந்தியத் தீவுகளின் ஆல்ரவுண்டரான பொல்லாரட், மிக குறைவு என்ற வகைமைக்குள் சேர்ந்தவர்.
ஐபிஎல் மூலம் இந்தியர்களுக்கும், இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கும் மிகவும் நெருக்கமான பொல்லார்ட் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். 2010-ஆம் ஆண்டு முதலே ஐபிஎல் மற்றும் சாம்பியன்ஸ் லீக் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடியவர் பொல்லார்ட். 13 வருடங்களாக மும்பை அணிக்கு விளையாடிய பொல்லார்ட், 5 முறை ஐபிஎல் கோப்பையை மும்பை வெல்ல உதவியாக இருந்துள்ளார். பல முக்கிய போட்டிகளில் பொல்லார்ட்டின் ருத்ர தாண்டவத்தை ரசிகர்கள் பார்த்துள்ளனர்.
இவரின் ஆக்ரோஷத்திற்கும், அதற்கு நேர்மாறான இவரின் நகைச்சுவைத் தன்மைக்கும் தனி ரசிக பட்டாளமே உள்ளது.
இந்நிலையில், ஐபிஎல் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக பொல்லார்ட் இன்று அறிவித்துள்ளார். மேலும், இதுகுறித்து அவர் கூறுகையில், ‘இது சுலபமான முடிவு இல்லை. இன்னும் சில ஆண்டுகள் நான் விளையாட தயாராக இருந்தேன். இருப்பினும் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் விவாதித்த பிறகு ஐபிஎல் போட்டியிலிருந்து ஓய்வுபெற முடிவெடுத்தேன். மேலும், மும்பை அணிக்காக என்னால் விளையாட முடியாது என்றால் அந்த அணிக்கு எதிராகவும் விளையாட என்னால் முடியாது. ஆகவே, ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராகப் பணியாற்றவுள்ளேன். மும்பை இந்தியன்ஸ் வீரர் எப்போதும் மும்பை இந்தியன்ஸ் வீரர் தான்.’ என்று தெரிவித்துள்ளார்.
பொல்லார்டின் இந்த முடிவால் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். முன்னதாக, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாகக் கடந்த ஏப்ரல் மாதம் பொல்லார்ட் அறிவித்தார்.
இதையும் படிங்க: கிறிஸ்துமஸ் தீவில் மில்லியன் கணக்கான சிவப்பு நண்டுகள் ஊர்வலம்: பாதுகாப்பை பலப்படுத்திய ஆஸ்த்திரேலியா