ரன் அவுட் செய்தது சரியென்றால் எச்சரிக்கை குறித்து பொய் சொல்லி தங்கள் செயலை நியாயப்படுத்த வேண்டியதில்லை என இங்கிலாந்து கேப்டன் பதிவு.
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. இந்த சுற்றுப்பயணத்தில் நேற்று முன்தினம் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் கடைசி ஒருநாள் ஆட்டம் லார்ட்ஸில் நடைபெற்றது.
இப்போட்டியில், ஆட்டத்தில் வெற்றியை நோக்கி இங்கிலாந்து அணி சென்று கொண்டிருந்த போது, அந்த அணியின் பேட்டர் சார்லோட் டீனை ‘மன்கட்’ முறையில் அவுட்டாக்கினார், தீப்தி சர்மா. இதனால் இந்தியா வெற்றி பெற்று தொடரையும் 3-0 என ஒயிட்வாஷ் செய்தது.
இருப்பினும் மன்கட் முறையில் அவுட் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் தீப்தி சர்மா விதிகளுக்குட்பட்டே சார்லோட்டை அவுட்டாக்கினார் என கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் ஆதரவு தெரிவித்தார். இருப்பினும் சர்ச்சை ஓயவில்லை.
இதையும் படிங்க: சர்ச்சையான தீப்தி ஷர்மாவின் ‘மன்கட்’ ரன் அவுட்! எம்சிசி அளித்த விளக்கம் என்ன?
இந்நிலையில், லண்டனில் இருந்து இந்தியாவுக்கு திரும்பிய தீப்தி சர்மா விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மன்கட் முறையில் விக்கெட் வீழ்த்தியது குறித்து பேசினார்.
அப்போது, சார்லி டீன் பந்துவீசும் முன்பு அடிக்கடி கிரீஸை விட்டு வெளியேறுவதைக் கண்டு அவரைப் பலமுறை எச்சரித்தோம். நடுவரிடமும் புகார் தெரிவித்தோம். அதற்குப் பிறகுமே சார்லி டீன் கிரீஸை விட்டு வெளியே வந்ததால் விதிமுறைப்படி அவரை ரன் அவுட் செய்தோம் என்று கூறியுள்ளார்.
இது குறித்து இங்கிலாந்து கேப்டன் ஹெதர் நைட் பதிலளித்து அவரது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது :
ஆட்டம் முடிந்துவிட்டது. இந்த ஆட்டத்திலும் தொடரிலும் இந்திய அணிதான் வெல்லத் தகுதியான அணி. ஆனால், சார்லி டீனுக்கு எச்சரிக்கை எதுவும் வழங்கப்படவில்லை. எச்சரிக்கை வழங்க வேண்டிய அவசியமும் இல்லை. இதனால், சார்லி டீனின் விக்கெட்டை முறைப்படி எடுக்கவில்லை என ஆகிவிடாது. ஆனால், ரன் அவுட் செய்தது சரியென்றால் எச்சரிக்கை குறித்து பொய் சொல்லி தங்கள் செயலை நியாயப்படுத்த வேண்டியதில்லை.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.