செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளை புறக்கணித்தார் மு.க.அழகிரி.
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் மூத்த மகன், மு.க.அழகிரி. முன்னாள் மத்திய உரத்துறை அமைச்சராக பணியாற்றிய இவர், திமுக கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அப்போதிலிருந்தே பெரிதும் அரசியல் செயல்பாடுகளில் இவர் ஈடுபடுவதில்லை.
ஆனால், அவ்வபோது தனது ஆதரவாளர்களின் இல்ல நிகழ்ச்சிகளுக்கு சென்று வருகிறார். ஆதரவாளர்களை சந்திக்கவும் செய்கிறார். அந்த வகையில், மு.க.அழகிரியின் தீவிர ஆதரவாளரும், மதுரை மாநகராட்சி முன்னாள் வடக்கு மண்டல தலைராகவும் விளங்கிய இசக்கி முத்துவை அவரது வீட்டில் மு.க.அழகிரி சந்தித்தார்.
இசக்கி முத்து சமீபத்தில் விபத்து ஒன்றில் சிக்கி உடல்நலக்குறைவுக்கு உள்ளானார். இதனால், மு.க.அழகிரி அவரை சந்தித்து நலம் விசாரித்தார். மேலும், மருத்துவ செலவுக்கு பண உதவி அளித்தார்.
இதையறிந்த செய்தியாளர்கள் அங்கு கூடினர். அப்போது, மு.க.அழகிரியிடம் மீண்டும் மத்திய அமைச்சராக வர வாய்ப்புள்ளதா? மீண்டும் திமுகவில் இணைய வாய்ப்பு உள்ளதா? உதயநிதியும், துரை தயாநிதியும் இணைந்து செயல்படுவதை எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்விகளை எழுப்பினர். ஆனால், கேள்விகளுக்கு மு.க.அழகிரி எந்தவித பதிலும் அளிக்காமல் அங்கிருந்து சென்றுவிட்டார்.
இந்நிலையில், தற்போது மதுரை மாநகர் முழுவதும் மு.க.அழகிரியின் மகனான தயாநிதி அழகிரியின் புகைப்படத்தை 2024-ன் மத்திய அமைச்சரே பல்லாண்டு வாழ்க என வசனங்கள் உள்ள போஸ்டர்கள் ஓட்டப்பட்டுள்ளது. இது திமுக கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: நவராத்திரி பண்டிகை கொண்டாட்டம்; பிரதமர் மோடி வாழ்த்து!