இங்கிலாந்து வீராங்கனை சார்லோட் டீனை மன்கட் முறையில் இந்திய பந்துவீச்சாளர் தீப்தி சர்மா அவுட்டாக்கியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது .
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அதன்படி, நேற்று மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் கடைசி ஒருநாள் ஆட்டம் லார்ட்ஸில் நடைபெற்றது.
இப்போட்டியில், ஆட்டத்தில் வெற்றியை நோக்கி இங்கிலாந்து அணி சென்று கொண்டிருந்த போது, அந்த அணியின் பேட்டர் சார்லோட் டீனை ‘மன்கட்’ முறையில் அவுட்டாக்கினார், தீப்தி சர்மா. இதனால் இந்தியா வெற்றி பெற்று தொடரையும் 3-0 என ஒயிட்வாஷ் செய்தது.
இந்திய வீரர் வினு மன்கட் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 1947-இல் சிட்னியில் நடைபெற்ற டெஸ்ட் ஆட்டம் ஒன்றில் கிரீஸில் இருந்து சென்ற ஆஸ்திரேலிய ஓபனர் பிரௌனை நான் ஸ்ட்ரைக்கர் முனையில் இருந்து ரன் அவுட்டாக்கினார். அன்றிலிருந்து இம்மாதிரியான முறை ‘மன்கட் அவுட்’ என அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ‘வெற்றி மீது வெற்றி வந்து நம்மை சேரும்’…..இறுதியில் ஹர்திக் பாண்டியா செய்த அந்தச் செயல்!
இந்நிலையில், மன்கட் முறையில் அவுட் செய்வது சர்ச்சையை ஏற்படுத்துகிறது. இந்நிலையில் தீப்தி சர்மா விதிகளுக்குட்பட்டே சார்லோட்டை அவுட்டாக்கினார் என கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் ஆதரவு தெரிவித்தார். இருப்பினும் சர்ச்சை ஓயவில்லை.
ஏற்கெனவே மன்கட் அவுட் முறையை ‘அன்ஃபேர் பிளேவில்’ இருந்து ரன் அவுட் பிரிவுக்கு மாற்றியது எம்சிசி.
இந்நிலையில் கிரிக்கெட் விதிமுறைகளை வகுக்கும் மேர்லிபோன் கிரிக்கெட் கிளப் (எம்சிசி) அளித்த விளக்கம்:
மன்கட் முறை அவுட், ரன் அவுட் விதி 38-க்கு மாற்றப்பட்டுள்ளது. நான் ஸ்ட்ரைக் பேட்டர்கள் கிரீஸை விட்டு செல்லாமல் கவனமாக இருக்க வேண்டும். இது அவர்களது பொறுப்பாகும். பௌலர் கையில் இருந்து பந்து செல்வதற்குள் பேட்டர்கள் கிரீஸை விட்டு அகலக்கூடாது. இதுதொடர்பான விதி தெளிவாக உள்ளது. ஆகையால், பேட்டர்கள் பொறுப்புடன் செயல்பட்டால், இதுபோன்ற அவுட்கள் ஏற்படாது.
இவ்வாறு எம்சிசி கூறியுள்ளது.