மக்களால் புறக்கணிக்கப்பட்ட குப்பைகளை மத்திய அரசு ஆளுநர்களாக நியமிப்பதாக தமிழ்நாடு சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு கூட்டம், நேற்று புதுச்சேரி கம்பன் கலையரங்கத்தில் நடைபெற்றது. இந்த விழா மாநில செயலாளர் சலீம் தலைமையில் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், முன்னாள் எம்எல்ஏ நாரா.கலைநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய தமிழ்நாடு சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தரசன், புதுச்சேரிக்கு தற்போது 23 சதவீதம் நிதி ஒத்துக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும், ஆனால் 90 சதவீதம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும் இதற்காக தான் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என வலியுறுத்தி வருவதாகவும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், புதுச்சேரியை புறக்கணிக்கும் வேலையை மத்திய அரசு செய்து வருவதாகவும், முதலமைச்சர் ரங்கசாமி என்று போஸ்டர் ஒட்டிக் கொள்ள மட்டும் அவர் பயன்படுவதாகவும், இதனால் தான் அவரே மனவருத்தத்தோடு இருப்பதாகவும் முத்தரசன் தெரிவித்தார்.
தமிழ்நாடு முதல்வர் ஆளுநரை எதிர்த்து குரல் கொடுக்கிறார். ஆனால், புதுச்சேரி முதல்வர் அப்படி இல்லை. முதல்வர் என்றால் முதுகெலும்பு இருக்க வேண்டும். எந்த சாமி வேண்டும் என்றாலும் முதல்வராக இருக்கலாம். ஆனால், மக்கள் நலனில் அக்கறை இருக்க வேண்டும். மத்திய அரசு மக்களால் புறக்கணிக்கப்பட்ட குப்பைகளை ஆளுநராக நியமனம் செய்கிறது. விடுதலைக்காக எப்படி போராட்டம் செய்தோமோ, அதேபோல ஆளுநரை ரத்து செய்ய போராட்டம் நடத்த வேண்டும் என முத்தரசன் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அகில இந்திய பொதுச்செயலாளர் ராஜா, புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைப்பதை யாராலும் தடுக்க முடியாது எனவும், புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, சட்டமன்றம் இருந்தும் மாநில அந்தஸ்து மறுக்கப்பட்டு வருவதாகவும், மாநில அந்தஸ்து பெற அனைத்து மதச்சார்பற்ற கட்சிகளும் ஒன்றுபட்டு போராட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
துருக்கி நிலநடுக்கம்: ஒரு லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் இடிப்பு..