சில நாட்களுக்கு முன்னர் நடிகர் சிலம்பரசன் அவர்களது தந்தை டி.ராஜேந்தர் நெஞ்சு வலி காரணமாக சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், நெஞ்சு வலி காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த டி.ராஜேந்தருக்கு வயிற்றில் ரத்தக் கசிவு ஏற்பட்டிருந்ததாகவும், உயர் சிகிச்சைக்காக வெளிநாடு செல்லும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், டி.ராஜேந்தர் உடல்நலன் கருதி வெளிநாடு செல்வதாகவும் சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.
விரைவில் சிகிச்சை முடிந்து டி.ராஜேந்தர் அவர்கள் உங்கள் அனைவரையும் சந்திப்பார் என்றும் கூறி இருந்த சிலம்பரசன், தனது ரசிகர்களின் பிரார்த்தனைகளுக்கும், அன்பிற்கும் நன்றி என்று அப்பதிவை முடித்துள்ளார்.
— Silambarasan TR (@SilambarasanTR_) May 24, 2022
டி.ராஜேந்தர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த செய்தியினை நடிகர் சிலம்பரசனுக்கு மிகவும் நெருங்கிய நண்பரான ஹரிஹரன் கஜேந்திரன் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் மே மாதம் 23ம் தேதி பகிர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
67 வயதாகும் டி.ராஜேந்தர் 1980 காலகட்டங்களில் மிகவும் புகழ் பெற்ற நடிகராக வலம் வந்தவர். அவர் நடித்த பல திரைப்படங்கள் வருடங்கள் முழுவதும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியிருந்தது.
தங்கைக்கோர் கீதம், உயிருள்ளவரை உஷா, ஒரு தாயின் சபதம், சபாஷ் பாபு போன்ற படங்கள் திரை ரசிகர்களால் விரும்பி பார்க்கப்பட்ட படங்களாகும்.
ஒரு நடிகராக மட்டும் நின்று விடாமல், இயக்குனராகவும், இசையமைப்பாளராகவும், திரைப்படத் தயாரிப்பாளராகவும், பாடகராகவும், கதாசிரியராகவும் என பன்முகத்தன்மை கொண்டவராய் டி.ராஜேந்தர் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தனக்கே உரிய பாணியில் அவர் பேசும் வசனங்கள் இன்று வரை ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்திருக்கின்றன. 2017ம் ஆண்டு வெளியாகிய விழித்திரு படத்தில் இறுதியாக டி.ராஜேந்தர் நடித்திருந்தார். இவருக்கு நடிகர் சிலம்பரசன் உட்பட இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.
இன்று முதல் விண்ணப்பிக்க தொடங்கலாம்; முதலமைச்சரின் புத்தாய்வு திட்டம்!