தொழில்முறை மற்றும் தேர்தல் வியூக நிபுணராக பல கட்சிகளுக்கு பணியாற்றி வந்தவர், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பிரஷாந்த் கிஷோர். கடந்த 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடி என்ற இமேஜை, மக்களிடம் கொண்டு சேர்த்த பெருமை இவரையேச் சேரும். பிறகு, மத்தியில் மேற்குவங்கத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மம்தா பானர்ஜியின் வெற்றிக்கும் வழிவகுத்தார் பிரசாந்த் கிஷோர். இந்நிலையில், அடுத்து வரும் 20 முதல் 30 வருடங்கள் பாரதிய ஜனதா கட்சியை மையப்படுத்தி தான் அரசியல் நடக்கும் என பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
கருத்தரங்கு ஒன்றில் உரையாற்றிய பிரசாந்த் கிஷோர் பா.ஜ.க.வைப் பற்றி பேசினார். அதில், இந்திய அரசியலில், பா.ஜ.க., மிகப்பெரிய வலிமையான கட்சியாக உருவாகி இருக்கிறது. நாட்டில் 30% ஓட்டுகளை பெற்று விட்டால், பல வருடங்கள் ஆதிக்கம் செலுத்தி விட முடியும். யாராயினும் எவ்வளவு பெரிய உயரத்திற்கு சென்றாலும், மறுபடியும் கீழே வர வேண்டும் என்பது நிதர்சனமான உண்மை. ஆனால், இந்த சரிவு உடனே நடக்காது. இதனை நாட்டில் உள்ள அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். அடுத்து வரும் 5 அல்லது 10 வருடங்களுக்குள் பா.ஜ.க.,வின் வீழ்ச்சியானது நிகழ்ந்து விடாது என்று பிரசாந்த் கிஷோர் கூறினார்.
நம் நாடு சுதந்திரம் அடைந்த பிறகு 40 முதல் 50 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சியை சுற்றியே இந்திய அரசியல் நடந்தது. எனவே, அடுத்த 20 முதல் 30 ஆண்டுகள். பா.ஜ.க.,வை சுற்றியே அரசியல் நடக்கும். இதில், நாம் பா.ஜ.க.,வை ஆதரிக்க வேண்டும் அல்லது எதிர்த்து நிற்க வேண்டும்.
சுதந்திரம் அடைந்த பிறகு, கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சி இருந்தது. கடந்த 1977 ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் கட்சியை வீழ்த்த எந்த தேசிய கட்சியாலும் முடியவில்லை. எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையானது நீண்ட நாட்களுக்கு முன்பே நீங்கியது. சரியான திட்டமிடல் இல்லாவிட்டால், அடுத்த சில வருடங்களுக்கு எந்த ஒரு எதிர்க்கட்சியும், கூட்டணிக் கட்சியும் தேசிய அளவில் ஆதிக்கம் செலுத்த முடியாது என்பது உண்மையாகும். கடந்த 1984 ஆம் ஆண்டுக்கு பிறகு, காங்கிரஸ் கட்சி, தனித்து நின்று சொந்தமாக வெற்றி பெற முடியவில்லை என்றும் பிரசாந்த் கிஷோர் பேசினார்.
வாட்டி வதைக்கும் வெயில்; பொழியுமா மழை? என்ன சொல்கிறது வானிலை ஆய்வு மையம்!