‘நேட்டோ’ அமைப்பில் ஸ்வீடனையும் பின்லாந்தையும் இணைத்துக்கொள்வதற்கான நெறிமுறை ஆவணத்தில், நேட்டோவின் 30 உறுப்பு நாடுகளும் கையொப்பமிட்டுள்ளது.
நேட்டோ என்பது சோவியத் யூனியனுக்கு எதிராக கடந்த 1949-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட வட அட்லான்டிக் ராணுவ ஒப்பந்த நாடுகளின் அமைப்பு. இந்த அமைப்பை அமெரிக்கா, இத்தாலி, பிரிட்டன் உள்ளிட்ட 12 நாடுகள் இணைந்து உருவாக்கின.
நேட்டோ அமைப்பில் 30 நாடுகள் உறுப்பினராக இருந்த நிலையில், தற்போது ஸ்வீடனும் பின்லாந்தும் இணைய உள்ளது. அதற்காக, இரு நாடுகளையும் நேட்டோவில் இணைத்துக் கொள்ளும் நெறிமுறை ஆவணங்களில், நேட்டோவின் 30 உறுப்பு நாடுகளும் நேற்று கையொப்பமிட்டன.
இருப்பினும், நேட்டோவின் அனைத்து உறுப்பு நாடுகளின் நாடாளுமன்றங்கள் இதற்கு ஒப்புதல் அளித்தால்தான் ஸ்வீடனும் ஃபின்லாந்தும் நேட்டோவில் இணையமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வு குறித்து நேட்டோ அமைப்பின் பொதுச் செயலர் ஜென்ஸ் ஸ்டால்டன்பர்க் கூறியுள்ளதாவது:
“ தற்போது நாம் மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளோம். எப்போதும் போல் இப்போதும் இந்த அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் நடவடிக்கையை நேட்டோ அமைப்பு மேற்கொள்கிறது.
ஸ்வீடனும், ஃபின்லாந்தும் இணைவதன் மூலம் நேட்டோ அமைப்பு கூடுதல் பலம் பெறும். பல ஆண்டுகளுக்குப் பிறகு நாம் மிகப் பெரிய ராணுவ நெருக்கடியை எதிர்கொண்டுள்ளோம். இந்த நிலையில் இரு நாடுகளும் நேட்டோவில் இணைப்பது வட அட்லான்டிக் பிராந்திய மக்களின் பாதுகாப்புக்கு வழிவகுக்கும்’’ என்று கூறியுள்ளார்.
கடந்த பிப்ரவரி 24-ம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்தது. இந்த படையெடுப்பினால் ஸ்வீடன், ஃபின்லாந்து போன்ற ஐரோப்பிய நாடுகள் தங்களின் பாதுகாப்பு குறித்து அச்சமடைந்தன. இதன் விளைவாகவே, ஸ்வீடன், ஃபின்லாந்து நாடுகள் நேட்டோவில் இணைவதற்கு விண்ணப்பித்தன.
ஸ்வீடன், ஃபின்லாந்து ஆகிய நாடுகள் நேட்டோ அமைப்பில் இணைவது அந்தந்த நாடுகளின் விருப்பம் என்று ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
தற்போதைய நிலவரப்படி, உக்ரைனில் உள்ள லுஹான்ஸ்க் பகுதியை முழுமையாக ரஷ்ய ராணுவம் கைப்பற்றியுள்ளது. மேலும், ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின் போரைத் தொடரும்படி உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு பலவீனமாகும் அபாயம்!