சென்னை தலைமைச்செயலக காவல் குடியிருப்பு காவல் துறையினர், கடந்த மாதம் 18 ஆம் தேதி, கீழ்ப்பாக்கம் கெல்லீஸ் சாலையில் தணிக்கைப்பணியில் ஈடுபட்டிருந்த போது, இரண்டு நபர்கள் சந்தேகப்படும் விதமாக ஆட்டோவில் சென்றதால், அவர்களை மடக்கி விசாரித்துள்ளனர்.
அப்போது கத்தி, போதைப்பொருள் போன்றவை இருந்ததால் அவர்களை கைது செய்து விசாரணைக்கு அழைத்து சென்றனர். 28 வயதான சுரேஷ் என்பவர் திருவல்லிக்கேணியைச் சேர்த்தவர் என்பதும் 28 வயதான விக்னேஷ் என்பவர் பட்டினப்பாக்கத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.
இருவரிடமும் அன்றிரவு தீவிர விசாரணை நடத்தப்பட்டதாக தெரிகிறது. இதனையடுத்து, 19 ஆம் தேதி காலை திடீரென விக்னேஷுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால், அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றுள்ளனர். அப்போது சிகிச்சை பலனின்றி வலிப்பு வந்து உயிரிழந்ததாக காவல் துறையினர் தரப்பில் கூறப்பட்டது. மேலும் விக்னேஷ் இறந்ததில் ஏதோ மர்மம் இருப்பதாக பெற்றோர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டது.
காவல் துறையினர், விக்னேஷை விரட்டி அடித்த சிசிடிவி காட்சிகளும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் வழக்கை, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணை தலைவரான அருண்ஹிட்லர், விக்னேஷின் குடும்பம் மற்றும் உறவினர்களிடம் விசாரணை செய்தார். அப்போது, விக்னேஷின் சகோதரரிடம் விசாரித்த போது, இந்த மரணத்தை மறைக்க காவல் துறையினர், ரூபாய் ஒரு லட்சம் கொடுக்க முயன்றதாக தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை மாநகர காவல் ஆணையர், சங்கர் ஜிவாலிடமும் விசாரணையானது மேற்கொள்ளப்பட்டது.
தேசிய மனித உரிமை ஆணையம், 8 வாரங்களுக்குள் இந்த விசாரணைக் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று ஆணை பிறப்பித்திருந்தது.
இந்நிலையில், விக்னேஷின் உடற்கூறு ஆய்வு அறிக்கையானது நேற்று வெளியானது. இதில் விக்னேஷின் உடலில் தலை, கண், தாடை போன்ற 13 இடங்களில் பலத்த காயங்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும் விக்னேஷ், மருத்துவமனைக்கு கொண்டு வருவதற்கு முன்பே இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விக்னேஷின் தலையில் 1 செ.மீ அளவுக்கு துளை இருப்பதாகவும் லத்தி அல்லது கம்பால் தாக்கப்பட்டிருக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் ஏற்கனவே விக்னேஷின் குடும்பத்திற்கு 10 லட்ச ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார். மேலும் சட்டசபையில் பேசும் போது, உடற்கூறு ஆய்வறிக்கை வந்ததும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்த நிலையில், விக்னேஷ் உடற்கூறு ஆய்வறிக்கையானது வெளிவந்துள்ளது. மேலும் உரிய நடவடிக்கைகள் இப்போது எடுக்கப்படுமா என்று சமூக ஆர்வலர்கள் தனக்கு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.