ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த வெற்றிப் படமான ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாகுபலி திரைப்படத்துக்கு பிறகு, இந்திய அளவில் முக்கிய இயக்குநராக வலம் வரும் ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான ஆர்ஆர்ஆர் திரைப்படம் நாடு முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், இப்படமானது உலக அளவில் ரூ.1,000 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது.
இதைத்தொடர்ந்து, அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் ஆர்ஆர்ஆர் திரைப்படம் சமீபத்தில் ரீ-ரிலிஸ் செய்யப்பட்டது. அப்போது திரைப்படத்தைக் கண்ட அமெரிக்காவை சேர்ந்த திரையுலக பிரபலங்கள், விமர்சகர்கள் ஆர்ஆர்ஆர் படத்துக்கு தங்களின் பாராட்டுக்களைத் தெரிவித்தனர்.
இந்நிலையில், அமெரிக்க சிகாகோவில் பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியில் இயக்குநர் ராஜமௌலி ஆர்ஆர்ஆர் படத்தின் 2-ம் பாகம் குறித்து பேசியுள்ளார். அதன்படி, ‘என் தந்தைதான் என்னுடைய எல்லாப் படங்களுக்கும் கதை எழுதியுள்ளார். நாங்கள் இருவரும் ஆர்ஆர்ஆரின் 2-ம் பாகம் குறித்து ஓரளவு பேசியுள்ளோம். மேலும், 2-ம் பாகத்தின் கதையை உருவாக்குவதில் அவர் ஈடுபட்டு வருகிறார்’ என்று தெரிவித்துள்ளார்.
ஆர்ஆர்ஆர் திரைப்படம் தற்போது ஆஸ்கர் விருதுக்கான பொதுப் பிரிவில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ‘அவுங்க ஒரு தேவதை’ பிரியங்கா காந்தி உடனான சந்திப்பு குறித்து நளினி நெகிழ்ச்சி பேச்சு!